பட்டாபிராமில் கடன் தொல்லையால் வருவாய் ஆய்வாளர் தற்கொலை
- அருண்குமார் பலரிடம் ரூ.5 லட்சம் வரை கடன் வாங்கி இருந்ததாக தெரிகிறது.
- தற்கொலை செய்த அருண்குமார், கடந்த 6 மாதத்துக்கு முன்பு பதவி உயர்வு வரும் என்று எதிர்பார்த்து இருந்ததாக தெரிகிறது.
திருநின்றவூர்:
பட்டாபிராம், அம்பேத்கர் தெருவை சேர்ந்தவர் அருண்குமார்(வயது 42). இவர் சேப்பாக்கத்தில் வருவாய் ஆய்வாளராக பணிபுரிந்து வந்தார். இவரது மனைவி தேவி. இவர்களுக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர்.
அருண்குமார் பலரிடம் ரூ.5 லட்சம் வரை கடன் வாங்கி இருந்ததாக தெரிகிறது. ஆனால் அவரால் பணத்தை திருப்பி கொடுக்க முடியவில்லை. இதனால் அருண்குமார் மன வருத்தத்தில் இருந்து வந்தார்.
இந்த நிலையில் இன்று காலை நீண்ட நேரம் ஆகியும் அருண்குமார் அறையில் இருந்து வெளியே வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அவரது மனைவி தேவி அறைக்குள் சென்று பார்த்தபோது மின்விசிறியில் தூக்கில் தொங்கிய நிலையில் கணவர் அருண்குமார் பிணமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதுகுறித்து பட்டாபிராம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தற்கொலை செய்த அருண்குமார், கடந்த 6 மாதத்துக்கு முன்பு பதவி உயர்வு வரும் என்று எதிர்பார்த்து இருந்ததாக தெரிகிறது. ஆனால் அவருக்கு பதவி உயர்வு கிடைக்கவில்லை. மேலும் கடன் தொல்லையும் இருந்ததால் அருண்குமார் தற்கொலை செய்து இருக்கலாம் என்று தெரிகிறது.
அருண்குமாரிடம் பணத்தை திருப்பி கேட்டு கடன் கொடுத்தவர்கள் யாரேனும் நெருக்கடி கொடுத்தனரா? பணி செய்த இடத்தில் ஏதாவது பிரச்சினை உள்ளதா? என்று பல்வேறு கோணங்களில் பட்டாபிராம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.