எண்ணெய் செக்கில் சிக்கி வாலிபர் பலி
- வேலை செய்து கொண்டிருந்த போது பரிதாபம்
- போலீசார் விசாரணை
சோளிங்கர்:
சோளிங்கர் போர்டிங் பேட்டையை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 42). இவர் சோளிங்கர் பஜாரில் எண்ணெய் செக்கில் வேலை செய்து வந்தார். இவரது மனைவி மீனாட்சி. இவர்களுக்கு ஜெயபாரதி என்ற மகளும், மோகித் என்ற மகனும் உள்ளனர்.
ஜெயபாரதி அங்குள்ள அரசு மகளிர் பள்ளியில் பிளஸ் 1 படித்து வருகிறார். மோகித் 8-ம் வகுப்பு படித்து வருகிறார். வழக்கம்போல சுரேஷ் இன்று காலை பஜாரில் உள்ள எண்ணெய் செக்கில் வேலை செய்து கொண்டிருந்தார்.
அப்போது எதிர்பாராத விதமாக செக்கில் கை சிக்கியது அவர் சுதாரிப்பதற்குள் அவரை முழுவதுமாக செக் இழுத்துக் கொண்டது. இதில் அவரது உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இது குறித்து சோளிங்கர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
விரைந்து வந்த போலீசார் சுரேஷ் உடலை மீட்டு சோளிங்கர் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.