- ராமநாதபுரத்தில் உணவு தானிய கிடங்கை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
- மண்டல மேலாளர் பாஃப்பல் பீர் சிங் இந்த சேமிப்பு கிடங்கில் ஆய்வு செய்தார்.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் பட்டணம்காத்தான் பகுதியில் இந்திய உணவு கழகத்தின் 12,530 மெட்ரிக் டன் கொள்ளவு கொண்ட சேமிப்பு கிடங்கு உள்ளது. மத்திய அரசின் இந்திய உணவுக்கழகம் சார்பில் இந்தக் கிடங்கில் ராமநாதபுரம் மாவட்டத்திற்கு தேவையான அரிசி, கோதுமை இருப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் மண்டல மேலாளர் பாஃப்பல் பீர் சிங் இந்த சேமிப்பு கிடங்கில் ஆய்வு செய்தார்.
அரிசி மற்றும் கோதுமை இருப்பு குறித்து கேட்டறிந்த அவர், அவை பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளதா என ஆய்வு செய்தார். உணவுப்பொருட்களை பாதுகாப்புடன் வைத்திருக்க வேண்டும் என அதிகாரிகளிடம் அவர் கேட்டுக்கொண்டார். ராமநாதபுரம் மாவட்டத்திற்கு மாதம் 4 ஆயிரம் டன் அரிசி, 100 டன் கோதுமை தமிழ்நாடு அரசின் ஒதுக்கீட்டின் அடிப்படையில் வழங்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.இந்த ஆய்வின் போது மேலாளர் கார்த்திகேயன், தரமேலாளர் ரவி ஆகியோர் உடனிருந்தனர்.