உள்ளூர் செய்திகள்

ராமநாதபுரம் மாவட்ட வர்த்தக சங்க ஆண்டு விழாவில் பங்கேற்றவர்கள்.

ஜி.எஸ்.டி.வரியை திரும்ப பெற வலியுறுத்தி சென்னையில் 22-ந் தேதி ஆர்ப்பாட்டம்

Published On 2022-07-16 09:00 GMT   |   Update On 2022-07-16 09:00 GMT
  • ஜி.எஸ்.டி.வரியை திரும்ப பெற வலியுறுத்தி சென்னையில் 22-ந் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
  • பெட்ரோல், டீசல் விலை உயர்வால் விலைவாசி உயர்ந்து கொண்டே செல்கிறது. ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்குக்கு அரசு தடைவிதித்துள்ளது.

ராமநாதபுரம்

ராமநாதபுரம் மாவட்ட வர்த்தக சங்க ஆண்டு விழாவில் பங்கேற்ற தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா நிருபர்களிடம் கூறியதாவது:-

மத்திய அரசு அரிசி, பால், தயிர் உள்ளிட்ட சில உணவுப் பொருட்களுக்கும் 5 சதவீத ஜி.எஸ்.டி. வரி விதித்துள்ளதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளோம். இந்த வரியை திரும்ப பெற வலியுறுத்தி வருகிற 22-ந் தேதி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் வணிகர் சங்கங்களின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

அதே போல் நேரடியாக விதிக்கப்படும் செஸ் வரியை முதல்வர் திரும்ப பெற வேண்டும். குப்பை வரி, தொழில்வரி என வரிகளை பிரித்து போடாமல், ஒரே வரியாக வசூலித்து லஞ்சம் லாவண்யம் இன்றி லைசென்ஸ் வழங்க வேண்டும்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் சாலைக்கு மேல் சாலை போடுவதால் கடைகள், வணிக நிறுவனங்கள், வீடுகள் தாழ்வாக சென்று விடுகின்றன. இதனால் மழைக் காலங்களில் கட்டிடங்களுக்குள் தண்ணீர் புகுந்து விடுகிறது. இந்த நடைமுறையை மாற்ற வேண்டும்.

பெட்ரோல், டீசல் விலை உயர்வால் விலைவாசி உயர்ந்து கொண்டே செல்கிறது. ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்குக்கு அரசு தடைவிதித்துள்ளது. இதை வரவேற்கிறோம். ஆனால் பல்நோக்கு வெளிநாட்டு நிறுவனங்கள் விற்பனை செய்யும் உணவுப்பொருட்கள் ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்குகளை பயன்படுத்துகின்றன. அவற்றையும் தடை செய்ய வேண்டும்.

தமிழக டி.ஜி.பி. அறிவித்துள்ளபடி மாநிலம் முழுவதும் வணிக நிறுவனங்கள் 24 மணி நேரமும் வியாபாரம் செய்ய அனுமதிக்க வேண்டும். ஆன்லைன் வர்த்தகம் அதிகரிப்பால் சிறு வணிகர்கள் முதல் பெரிய வணிகர்கள் வரை பாதிக்கப்பட்டு வருகின்றனர். கவர்ச்சிகரமான விளம்பரங்களை வெளியிட்டு பெரிய நிறுவனங்கள் குறைந்த விலைக்கு பொருட்களை விற்பனை செய்கின்றன.

சாமானிய வியாபாரிகள் அப்படி விற்க முடியாது. அதனால் சாமானிய வியாபாரிக்கும், அதானி, அம்பானிக்கும் ஒரே மாதிரியான சட்டம் கொண்டு வர வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

விழாவில் ராமநாதபுரம் மாவட்ட வர்த்தக சங்க தலைவர் ஜெகதீசன், மாவட்ட கவுரவத் தலைவர் ஜபருல்லாகான், மாவட்ட துணைத் தலைவர் ராசி போஸ், மாவட்ட பொதுச் செயலாளர்கள் குப்தா கோவிந்தராஜ், ஜீவானந்தம், மாவட்ட பொருளாளர் சாதிக் அலி உள்படட ஏராளமான வர்த்தகர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News