உள்ளூர் செய்திகள்

கொத்தமல்லி விளைச்சல் பாதிப்பு

Published On 2023-01-29 07:50 GMT   |   Update On 2023-01-29 07:50 GMT
  • கொத்தமல்லி விளைச்சல் பாதிக்கப்பட்டதால் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.
  • 10 கிலோ ரூ.1000-க்கு கீழ் மார்க்கெட்டில் விலை போகின்றது.

அபிராமம்

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி தாலுகா அபிராமம் பகுதியில் இந்த ஆண்டு போதிய அளவு பருவமழை பெய்யாததால் நெல் விவசாயம் பாதிக்கப்பட்டு உள்ளது.

அபிராமம் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களான நகரத்தார் குறிச்சி, அச்சங்குளம், விரதக்குளம், நரியன், பள்ள பச்சேரி உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட கிராமங்களில் நெல் விவசாயத்தைவிட பருத்தி, மிளகாய், கொத்த மல்லி உள்ளிட்ட விவசாய சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின் றனர்.

கடந்த அக்டோபர், நவம்பர் மாத இறுதியில் கொத்தமல்லி சாகுபடியை விவசாயிகள் தொடங்கினர். தற்போது இந்த கிராமங்களில் கொத்தமல்லியை அறுவடை செய்து அதை காயவைக்கும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

இதுகுறித்து அந்த பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் கூறும்போது, ஒவ்வொரு வருடமும் ஐப்பசி, கார்த்திகை மாதங்களில் கொத்தமல்லி விதைக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறோம். அவை தை மாதம் அறுவடை செய்யப்படும்.

கடந்த ஆண்டு அதிக மழை பெய்ததால் கொத்த மல்லி விளைச்சல் எதிர்பார்த்ததை விட அதிகமாக இருந்தது. அப்போது 10 கிலோ கொத்தமல்லி ரூ.1500 முதல் 2000 வரை விலை போனது.

இந்த ஆண்டு போதிய அளவு பருவ மழை பெய்யாததால் கொத்தமல்லி விளைச்சல் குறைந்து விட்டது. கொத்தமல்லி விலையும் குறைந்து 10 கிலோ ரூ.1000-க்கு கீழ் மார்க்கெட்டில் விலை போகின்றது. இதனால் எங்களது வருமானம் பாதிக்கப்பட்டுள்ளது என்றனர்.

Tags:    

Similar News