உள்ளூர் செய்திகள்

சாலை மறியலில் ஈடுபட்ட கிராம மக்கள்.

வீட்டிற்குள் புகுந்த மழைநீர் கிராம மக்கள் சாலை மறியலால் போக்குவரத்து பாதிப்பு

Published On 2023-09-02 10:14 IST   |   Update On 2023-09-02 10:14:00 IST
  • ஆக்கிரமிப்பு காரணமாக தண்ணீர் செல்ல வழியில்லாததால் வீடுகளுக்குள் மழை நீர் புகுந்து கிராம மக்கள் கடும் சிரமம் அடைந்தனர்.
  • எனவே இன்று காலை கரூர், கடவூர் செல்லும் சாலையில் கிராமமக்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.

வடமதுரை:

திண்டுக்கல் மாவட்டத்தில் வெயில் சுட்டெரித்து வந்த நிலையில் கடந்த 2 நாட்களாக மழை பெய்துவருகிறது. குறிப்பாக நேற்று மாலையில் தொடங்கி இரவு வரை கனமழை பெய்தது. மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்ததால் வெப்பம் தணிந்து குளிர்ச்சி ஏற்பட்டது.

அய்யலூர் அருகே சுக்காம்பட்டி புதுப்பட்டியில் அதிகளவில் ஆக்கிரமிப்புகள் உள்ளது. இதனை அகற்றவேண்டும் என கிராம மக்கள் பலமுறை புகார் அளித்தனர். ஆனால் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இந்த நிலையில் அப்பகுதியில் பெய்த கனமழையால் குளம், கண்மாய் உள்பட நீர்நிலைகள் நிரம்பின. மேலும் சாலைகளில் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடியது. ஆக்கிரமிப்பு காரணமாக தண்ணீர் செல்ல வழியில்லாத நிலை ஏற்பட்டது. இதனால் கிராமங்களில் உள்ள வீடுகளுக்குள் மழை நீர் புகுந்தது. இதனால் கிராம மக்கள் கடும் சிரமம் அடைந்தனர்.

பலமுறை ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காததால் குடியிருப்பு பகுதியில் மழைநீர் புகுந்து பொதுமக்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தி உள்ளது. எனவே இன்று காலை கரூர், கடவூர் செல்லும் சாலையில் கிராமமக்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் வாகனங்கள் செல்ல முடியாமல் இருபுறமும் அணிவகுத்து நின்றன.

சம்பவம் குறித்து அறிந்ததும் வடமதுரை போலீசார் மற்றும் சுக்காம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் முனியப்பன், ஊராட்சி செயலாளர் குமரவேல் ஆகியோர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். விரைவில் ஆக்கிரமிப்பை அகற்றி மழைநீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். இதனைதொடர்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

சாலை மறியலால் அப்பகுதியில் சுமார் 1 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் கல்லூரி மற்றும் பள்ளிகளுக்கு செல்லும் மாணவ-மாணவிகள், வேலைக்கு செல்பவர்கள், விவசாயிகள் என பல்வேறு தரப்பினரும் பாதிக்கப்பட்டனர்.

Tags:    

Similar News