- கடலூர் மாவட்டத்தில் விவசாயிகள் கடந்த ஜனவரி மாதத்தில் நெல் சாகுபடி செய்தனர்.
- இந்த நெற்பயிர் தற்போது அறுவடை செய்யும் நிலையில் உள்ளது
கடலூர்:
தமிழகம் முழுவதும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி, வெப்பசலனம் காரணமாக பரவலாக மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருந்தது. அதன்படி நேற்று மாலை கடலூர் மாவட்டத்தில் குளிர்ந்த காற்று வீசியது. இரவு 7 மணி முதல் திடீரென மழை பெய்தது.
இந்த மழை நள்ளிரவு வரை நீடித்தது. கடலூர், மஞ்சக்குப்பம், திருப்பாதிரிப்புலியூர், கடலூர் துறைமுகம், நெல்லிக்குப்பம், மேல்பட்டாம்பாக்கம், நடுவீரப்பட்டு, பாலூர், கூத்தப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில பரவலாக மழை பெய்தது.
கடலூர் மாவட்டத்தில் விவசாயிகள் கடந்த ஜனவரி மாதத்தில் நெல் சாகுபடி செய்தனர். இந்த நெற்பயிர் தற்போது அறுவடை செய்யும் நிலையில் உள்ளது. ஒருசில இடங்களில் அறுவடை நடந்து வருகிறது. சில பகுதியில் நெற்பயிர் அறுவடைக்கு தயார் நிலையில் உள்ளது.
இந்த சூழ்நிலையில் தற்போது பெய்யும் மழையால் நெல்மணிகள் கீழே சாயும் நிலையில் உள்ளது. இதனால் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
ஏற்கனவே கடந்தமுறை வீசிய சூறாவளி காற்றால் கடலூர் மாவட்டத்தில் 700-க்கும் மேற்பட்ட ஏக்கரில் சாகுபடி செய்திருந்த வாழை சேதமானது. தொடர்ந்து விவசாயிகள் இயற்கை இடர்பாடுகளால் தொடர் நஷ்டத்தை சந்தித்து வருகிறார்கள்.
எனவே, தமிழக அரசு இதில் தனிக்கவனம் செலுத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.