கறம்பக்குடி அருகே காலி குடங்களுடன் கிராம மக்கள் சாலை மறியல்
- கறம்பக்குடி அருகே காலி குடங்களுடன் கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்
- பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் அதிகாரிகளிடம் பலமுறை சென்று முறையிட்டும் எந்தவித நடவடிக்கையும் இல்லை
கரம்பக்குடி:
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி ஒன்றியம் திருமணஞ்சேரி மற்றும் பட்டத்திக்காடு ஊராட்சிக்கு உட்பட்ட சவேரியார் பட்டினம் கிழக்கு, சவேரியார் பட்டினம் மேற்கு, மயிலாடிதெரு மற்றும் புது தெரு ஆகிய நான்கு கிராமங்கள் உள்ளன. இங்கு சுமார் 250 குடும்பங்களுக்கு மேல் வசித்து வருகின்றனர். இவர்களின் குடிநீர் தேவைக்கு 30 ஆயிரம் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர் தேக்க தொட்டி ஒன்று உள்ளது. இவற்றிற்கு மின் வினியோகம் செய்யும் புதுப்பட்டியில் உள்ள டிரான்ஸ்பார்மர் ஒரு மாத காலமாக பழுதடைந்து உள்ளது. இதனால் இந்த நான்கு கிராமங்களுக்கும் குடிநீர் வினியோகம் தடை ஏற்பட்டது. இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் அதிகாரிகளிடம் பலமுறை சென்று முறையிட்டும் எந்தவித நடவடிக்கையும் இல்லை. இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவுடன் மஞ்சு விடுதி விளக்கு சாலை அருகே மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த கறம்பக்குடி காவல் நிலைய ஆய்வாளர் செந்தூர்பாண்டியன் மற்றும் புதுப்பட்டி உதவி மின் பொறியாளர் ஆகியோர் அங்கு சென்று சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது ஒரு வார காலத்திற்குள் மின் மாற்றியை சரி செய்து குடிநீர் மற்றும் மின்விநியோகம் சீரமைக்கப்படும் என உறுதி வழங்கப்பட்டதையடுத்து பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.இதனால் அப்பகுதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.