சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்.
- ஊராட்சிக்குள் கழிவுநீர் வராத வண்ணம் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- இரு பகுதி மக்களுக்கும் இடையே பிரச்சினை உருவாக வாய்ப்பு உள்ளது.
தஞ்சாவூர்:
தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் இன்று வாராந்திர குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. அப்போது வண்ணாரப்பேட்டை ஊராட்சி பொதுமக்கள் திடீரென கலெக்டர் அலுவலகம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர்.
உடனே பாதுகாப்பில் இருந்த போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பொதுமக்கள், பிள்ளையார்பட்டி குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் இருந்து கழிவுநீர் பிள்ளையார்பட்டி எல்லைக்கு உட்பட்டு இருந்தது. ஆனால் தற்போது அதை விரிவாக்கபணி செய்து வண்ணாரபேட்டை ஊராட்சி எல்லைவரை கொண்டு வந்துள்ளனர். இதனால் இரு பகுதி மக்களுக்கும் இடையே பிரச்சினை உருவாக வாய்ப்பு உள்ளது.
கழிவுநீர் வருவதால் பொதுமக்களும் பாதிக்கப்பட்டு உள்ளோம். எனவே வண்ணாரப்பேட்டை ஊராட்சிக்குள் கழிவுநீர் வராத வண்ணம் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். இதையடுத்து போலீசார் உங்கள் கோரிக்கை குறித்து மனு அளியுங்கள் என்றனர். அதன் பின்னர் பொதுமக்கள் மறியலை கைவிட்டு மனு அளித்தனர்.