வால்பாறை ரொட்டிக்கடை பஜாரில் மின் மயானம் அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு
- பொதுமக்கள் நகராட்சி தலைவியிடம் மனு அளித்தனர்.
- நவீன எரியூட்டல் மையம் அமைத்தால் குடிநீர் மாசுபடும் என கூறி உள்ளனர்.
வால்பாறை,
கோவை மாவட்டம் வால்பாறை அருகே ரொட்டிக்கடை பஜார் பகுதியில் சுமார் 500 குடும்பத்தினர் வாழ்ந்து வருகின்றனர். அங்கு 1.25 ஏக்கர் அளவில் உள்ள கல்லறை பகுதியில் சுமார் 50 சென்ட் அளவில் வால்பாறை நகராட்சி மூலம் நவீன மயானம் அமைக்க சுமார் ரூ.2 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.
இந்தநிலையில் பணிகள் தொடங்க நகராட்சி நடவடிக்கை எடுத்து வரும் நிலையில் அப்பகுதி மக்கள் நவீன மயானம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
வால்பாறை நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு அவர்கள் நகராட்சி தலைவர் அழகு சுந்தரவள்ளியிடம் மனுவை வழங்கிச் சென்றனர். அந்த மனுவில் நவீன எரியூட்டல் மையம் அமைத்தால் குடிநீர் மாசுபடும். அருகில் உள்ள பள்ளி குழந்தைகள் மனதளவில் பாதிக்கப்படுவர், புகையால் மலை உச்சி பகுதியில் குடியிருப்புகளில் மூச்சுத்திணறல் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
எனவே நகராட்சி நிர்வாகம் நவீன மின் மயானம் அமைக்கும் திட்டத்தை கைவிட வேண்டும் என கூறி உள்ளனர்.