ஊட்டியில் ஆண் செவிலியரிடம் போலீஸ் விசாரணை
- செவிலியர் பயிற்சி மாணவி ஒருவரிடம், மருத்துவமனையில் பணியாற்றும் ஆண் செவிலியர் ஒருவர் கையை பிடித்து இழுத்து பாலியல் தொல்லை கொடுத்தார்.
- மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சுரேசை விரைவில் போக்சோ சட்டத்தில் கைது செய்யவும் போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
ஊட்டி:
ஊட்டி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் அரசு செவிலியா் பயிற்சி பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் உள்ளூர் மட்டுமின்றி வெளி மாவட்டங்களை சேர்ந்த மாணவிகளும் படித்து வருகின்றனர்.
கடந்த மாதம் செவிலியர் பயிற்சி மாணவி ஒருவரிடம், மருத்துவமனையில் பணியாற்றும் ஆண் செவிலியர் ஒருவர் கையை பிடித்து இழுத்து பாலியல் தொல்லை கொடுக்க முயன்றதாக கூறப்படுகிறது.
இதனால் அதிர்ச்சியடைந்த மாணவி சத்தம்போட்டு அங்கிருந்து தப்பி சென்றார். மேலும் இதுகுறித்து மாணவி ஊட்டி அரசு மருத்துவக் கல்லூரி டீன் மனோகரியிடம் புகாா் அளித்துள்ளாா்.
அந்த புகாரின்பேரில் மருத்துவமனை டீன் மற்றும் சமூக ஆா்வலா்கள் உள்ளிட்ட விசாகா கமிட்டி சாா்பில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்தது. இதில், செவிலியா் பயிற்சி பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்தது.
இதையடுத்து மாணவியிடம் தகாத முறையில் ஈடுபட முயற்சித்த புகாரின் பேரில் மருத்துவமனை ஆண் செவிலியா் சுரேஷ்(38) என்பவரை மருத்துவக் கல்லூரி நிா்வாகம் பணியிடை நீக்கம் செய்து நடவடிக்கை எடுத்துள்ளது. தொடர்ந்து இது தொடர்பாக விசாரணையும் நடக்கிறது.
இந்த நிலையில் இந்த சம்பவம் குறித்து ஊட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் நர்சிங் பயிற்சி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சுரேசை விரைவில் போக்சோ சட்டத்தில் கைது செய்யவும் போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.