தனியார்துறை வேலை வாய்ப்பு முகாம்
- தனியார்துறை வேலை வாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது
- வருகின்ற 29-ந் தேதி நடைபெறுகிறது
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் தனலட்சுமி சீனிவாசன் கல்வி குழுமம், பெரம்பலூர் இணைந்து நடத்தும் மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் வரும் 29-ந் தேதி அன்று பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் கல்வி குழும வளாகத்தில் வைத்து நடைபெற உள்ளது.
இவ்வேலைவாய்ப்பு முகாமில் பெரம்பலூர் மாவட்டத்தில் அமைந்துள்ள எம்ஆர்எப் நிறுவனம் உட்பட சென்னை, காஞ்சிபுரம், ஓசூர்,கோவை, திருப்பூர், திருச்சி, மதுரை பகுதிகளில் அமைந்துள்ள 150க்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்கள் கலந்து கொண்டு 10ஆயிரத்திற்கும் மேற்பட்ட தகுதியான நபர்களை தங்களது நிறுவனங்களுக்கு தேர்வு செய்ய உள்ளனர்.
இந்த முகாமில் தமிழ்நாடு அரசின் அயல்நாட்டு நிறுவனத்தின் பதிவு வழிகாட்டுதல்கள், தொழில் பழகுநர் மற்றும் குறுகிய கால திறன் பயிற்சிக்கு வழிகாட்டுதல்கள் மற்றும் சுயதொழில் மற்றும் அரசு கடன் உதவி தொடர்பான ஆலோசனைகளும் வழங்கப்படவுள்ளது. இதில் கலந்து கொள்ள விருப்பமுள்ள வேலை நாடுநர்கள் தங்களது ஆதார் எண், பயோடேட்டா மற்றும் கல்வி சான்றுகளுடன் வரும் 29-ந் தேதி (சனிக்கிழமை) காலை 8.00 முதல் மாலை 3.00 மணி வரை நடைபெறும் மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்ளலாம். இம்முகாமில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் Candidate Login –ல் தங்களது விவரங்களை பதிவு செய்து கொள்ளலாம். இம்மாபெரும் வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்வதற்கு அனுமதி இலவசம் என மாவட்ட கலெக்டர் க.கற்பகம் தெரிவித்துள்ளார் .