வேப்பந்தட்டை அருகே ஆம்னி பேருந்து சாலையில் கவிழ்ந்து விபத்து-18 பயணிகள் காயம்
- வேப்பந்தட்டை அருகே ஆம்னி பேருந்து சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது
- திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் பஸ் கவிழ்ந்தது
வேப்பந்தட்டை:
திருச்சியில் இருந்து பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை வழியாக பெங்களூர் நோக்கி நேற்று இரவு ஆம்னி பஸ் ஒன்று பயணிகளை ஏற்றிக்கொண்டு வந்தது. இந்த பஸ்சில் 20 பயணிகள் பயணம் செய்தனர். பஸ்சை லால்குடி அருகே உள்ள பூவாளூரை சேர்ந்த பசுபதி (வயது29) ஓட்டி வந்தார். இன்று அதிகாலை 2 மணி அளவில் வேப்பந்தட்டை பெட்ரோல் பங்க் அருகே வந்தபோது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் பஸ் கவிழ்ந்தது. இதில் பஸ்சில் பயணம் செய்தவர்கள் படுகாயம் அடைந்தனர். தகவலறித்து நெடுஞ்சாலை ரோந்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பஸ்சில் இடுபாடுகளில் சிக்கித் தவித்த பயணிகளை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து சம்பவத்தில் ஓசூரை சேர்ந்த புஷ்பா காந்தி (வயது 60), அதே ஊரை சேர்ந்த லட்சுமி (55), பெங்களூரை சேர்ந்த ராஜேஷ் (45) உள்பட 18 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்களுக்கு பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவத்தில் டிரைவர் பசுபதி, மாற்று டிரைவர் உத்திரகுமார், கிளீனர் நேசமணி உள்பட 5 பேர் காயம் இன்றி தப்பித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக அரும்பாவூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நள்ளிரவு விபத்து சம்பவத்தால் வேப்பந்தட்டையில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது.