சாலையை கடக்க முயன்ற முதியவர் கார் மோதி பலி
- சாலையை கடக்க முயன்ற முதியவர் கார் மோதி பலியானார்
- டிரைவரை கைது செய்து விசாரணை
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டம் மங்களமேடு போலீஸ் சரகத்திற்கு உட்பட்டது ரஞ்சன்குடி கிராமம். இங்குள்ள காந்தி நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஷேக் ஜாபர் (வயது 63). வெளிநாட்டில் வேலை பார்த்து வந்த இவர் கடந்த 4 மாதங்களுக்கு முன்பாக விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்திருந்தார். இவருக்கு மனைவி மற்றும் பிள்ளைகள் உள்ளனர்.
இந்தநிலையில் நேற்று சொந்த வேலை காரணமாக வீட்டில் இருந்து வெளியே சென்ற ஷேக் ஜாபர் அங்குள்ள திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையை நடந்தவாறு கடக்க முயன்றார். அப்போது அந்த வழியாக சென்னை நோக்கி மின்னல் வேகத்தில் சென்ற சொகுசு கார் ஷேக் ஜாபர் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடினார்.
இதையடுத்து அந்த வழியாக வந்தவர்கள் உடனடியாக அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு நேற்று இரவு சிகிச்சை பலனின்றி ஷேக் ஜாபர் பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து மங்களமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து கார் டிரைவரான சென்னை நந்தனத்தை சேர்ந்த மாதவன் (40) என்பவரை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.