கோவையில் விழிப்புணர்வு மாரத்தான் வீல் சேர் போட்டியில் பங்கேற்ற மாற்றுத்திறனாளிகள்
- கவுண்டம்பாளையத்தில் தொடங்கி துடியலூர் வரை நடந்தது.
- பங்கு பெற்ற அனைத்து மாற்றுத்திறனாளி வீரர்களுக்கும் சான்றிதழ் மற்றும் பதக்கங்கள் வழங்கப்பட்டன.
கோவை,
கோவையில் மாற்றுத்திறனாளிகளின் திறமைகளை ஊக்குவிக்கும் வகையில் ரன் பார் வீல் எனும் மாரத்தான் போட்டி, சிற்றுளி அறக்கட்டளை மற்றும் கங்கா மருத்துவமனை சார்பில் நடத்தப்பட்டது. இது கவுண்டம்பாளையத்தில் தொடங்கி துடியலூர் வரை நடந்தது. இங்கு 3, 5, 10 கிலோ மீட்டர் என்று 3 பிரிவுகளாக போட்டிகள் நடத்தப்பட்டன.
விளையாட்டு பற்றிய விழிப்புணர்வை அனைத்து தரப்பினரிடமும் ஏற்படுத்தும் வகையில் நடந்த மாரத்தான் போட்டியில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் இருந்தும் ஆண், பெண் உள்பட 100-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனர். தமிழ்நாடு வீல் சேர் கூடைப்பந்து அணியின் முன்னணி வீரர்களும் பங்கேற்றனர். இது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.
முன்னதாக கோவை மாவட்ட கலெக்டர் கிராந்தி குமார், மாநகராட்சி ஆணையர் பிரதாப் ஆகியோர் மாரத்தான் போட்டிகளை தொடங்கி வைத்தனர். இதில் பங்கு பெற்ற அனைத்து மாற்றுத்திறனாளி வீரர்களுக்கும் சான்றிதழ் மற்றும் பதக்கங்கள் வழங்கப்பட்டன.