உள்ளூர் செய்திகள்

அதிகாரிகள் அதிரடி ஆய்வு-தரமற்ற விதை விற்பனை செய்த வியாபாரிகளுக்கு அபராதம்

Published On 2022-06-28 08:59 GMT   |   Update On 2022-06-28 08:59 GMT
  • தென்காசி மற்றும் சங்கரன்கோவில் விதை ஆய்வாளர்கள் விதை மாதிரிகள் எடுத்து நெல்லையில் உள்ள விதை பரிசோதனை நிலையத்திற்கு ஆய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டது.
  • தென்காசி நீதிமன்றத்தில் 2 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டன.

நெல்லை:

நெல்லை, விதை ஆய்வு துணை இயக்குநர் கட்டுப்பாட்டில் உள்ள விதை ஆய்வாளர்கள் நெல்லை, தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் விவசாயிகளுக்கு தரமான விதைகள் கிடைக்கும்பொருட்டு விதை விற்பனை நிலையங்களை தொடர்ந்து ஆய்வு செய்து விதைச் சட்டங்களை அமுல்படுத்தி வருகின்றனர்.

தென்காசி மற்றும் சங்கரன்கோவில் விதை ஆய்வாளர்கள் விதை மாதிரிகள் எடுத்து நெல்லையில் உள்ள விதை பரிசோதனை நிலையத்திற்கு ஆய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

இதில் ஆறு நெல் விதை மாதிரிகள் தரமற்றது என தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து தரமற்ற விதைகள் முடக்கம் செய்யப்பட்டது. மேலும் தென்காசி, ஆலங்குளம் மற்றும் மடத்துப்பட்டியில் இவ்விதைகள் விற்பனை செய்த விற்பனையாளர்கள் மீது ஆலங்குளம் நீதிமன்றத்தில் 4 வழக்குகளும், தென்காசி நீதிமன்றத்தில் 2 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டன.

ஆலங்குளம் மற்றும் தென்காசி நீதிமன்றங்களில் வழக்குகள் விசாரிக்கப்பட்டு தரமற்ற நெல் விதைகளை விற்பனை செய்த தென்காசி ஆலங்குளத்தைச் சேர்ந்த 4 விதை விற்பனையாளர்களுக்கும், தென்காசி மற்றும் மடத்துப்பட்டியைச் சேர்ந்த 2 விற்பனையாளர்களுக்கும், கயத்தாரில் உள்ள 2 விதை விநியோகஸ்தர்களுக்கும் ஐதராபாத் மற்றும் பெங்களூருவைச் சேர்ந்த தனியார் விதை உற்பத்தியாளர்களுக்கும் ரூ.18 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.

நெல்லை, தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் உரிமம் பெற்ற விற்பனை நிலையங்களில் தொடர்ந்து தரமான விதைகளை மட்டுமே விற்பனை செய்ய வேண்டும். தரமற்ற விதைகளை விற்பனை செய்யும் விதை விற்பனை நிலையங்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொண்டு நீதிமன்றங்களில் தண்டனை பெற்றுத்தருவதுடன், உரிமங்கள் ரத்து செய்வது உள்ளிட்ட சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று நெல்லை விதை ஆய்வு துணை இயக்குநர் ராஜ்குமார் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News