காலம் தான் பதில் சொல்லும் சசிகலா, தினகரன், ஓ.பி.எஸ் இணைவதற்கான வாய்ப்பு இல்லை- பெங்களூரு புகழேந்தி பேட்டி
- இலங்கை பற்றி பேசுகிறார். எடப்பாடி பழனிசாமிக்கு அதைப்பற்றி என்ன தெரியும்? அவருக்கு வரலாறு தெரியாது.
- சுயநலமாக ஒருவர் மீது பழி போட்டு பேசுவதிலேயே சரியாக இருக்கிறார் பழனிசாமி.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரியில் அ.தி.மு.க. செய்தி தொடர்பாளர் புகழேந்தி நிருபர்களிடம் கூறியதாவது:-
அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டப்பட்ட விவகாரம் குறித்த வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது. பொதுக்குழு உறுப்பினர்கள் முடிவில் குழப்பம் இருக்கும் பட்சத்தில் பொதுமக்களே புதிய பொதுச் செயலாளரை தேர்ந்தெடுப்பர் என விதி உள்ளது.
அப்படி இருக்கையில் அவசர அவசரமாக பழனிசாமி ஊர் ஊராக சென்று பேசி வருகிறார்.
கிருஷ்ணகிரியில் பேசிய அவர் அ.தி.மு.க.ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வத்தை துரோகி, பதவி வெறி பிடித்தவர் என்கிறார். ஒற்றை தலைமை வேண்டும் என பன்னீர்செல்வம் கூறவில்லை. 10 முறை பொது பட்ஜெட் வாசித்தவர். 3 முறை முதல்வர் பதவியில் இருந்தவர் மீது அநாகரிகமாக பேசி வருகிறார்.
இலங்கை பற்றி பேசுகிறார். அவருக்கு அதைப்பற்றி என்ன தெரியும்? அவருக்கு வரலாறு தெரியாது. இரட்டை இலை விவகாரத்தில் பணம் கொடுத்தது யார்?
கிருஷ்ணகிரியில் பல கிராமங்களில் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் வந்து சேரவில்லை. இது குறித்து பேசி இருக்கலாம். அதை விடுத்து சுயநலமாக ஒருவர் மீது பழி போட்டு பேசுவதிலேயே சரியாக இருக்கிறார் பழனிசாமி.
பொதுநலமாக பேசி வரும் பன்னீர்செல்வம் இவரது விமர்சனங்களுக்கு பதில் கூறப்போவதில்லை.
பொது செயலாளர் யார் என மக்கள் தேர்ந்தெடுக்கட்டும்.அப்போது தெரியும். பன்னீர்செல்வம் அலை வீசுவதை இவர்களால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.
பன்னீர்செல்வம் இன்னும் தன் கட்சிப் பணிகளை முடிக்கவில்லை. இதுவரை 40 மாவட்ட செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கும் புதிய மாவட்ட செயலாளர்கள் நியமிக்கப்படுவர்.
பின்னர் மாநிலம் முழுவதும் எழுச்சியுடன் மாநாடு போல மாவட்டம் தோறும்கூட்டங்களை பன்னீர்செல்வம் நடத்துவார். சசிகலா, தினகரன், ஓ.பி.எஸ். இணைவதற்கான வாய்ப்பு தற்போதைக்கு இல்லை. காலம் தான் பதில் சொல்லும்.
இவ்வாறு புகழேந்தி கூறினார்.