கிருஷ்ணகிரியில் கேதாரி கவுரி விரதத்தையொட்டி கோவில்களில் பெண்கள் சிறப்பு வழிபாடு
- பெணகள் சிறப்பு வழிபாட்டில் ஈடுபட்டனர்.
- பூஜை செய்து சுவாமியை வணங்கி நோன்பை நிறைவு செய்தனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரியில் கேதாரி கவுரி விரதத்தையொட்டி கோயில்களில் பெணகள் சிறப்பு வழிபாட்டில் ஈடுபட்டனர்.
கேதாரி கவுரி விரதம் என்பது கணவ னும், மனைவியும் ஒரு வருக்கொருவர் பிரியாமல் இறுதி வரை மகிழ்வுடன் வாழ கடைபிடிப்பதாகும்.
இந்த விரதத்தை கடைபிடிக்கும் கணவன், மனைவி இருவரும் லட்சியத் தம்பதிகளாக வாழ்வார்கள். தீபாவளிக்கு மறுநாள், கலச வடிவிலோ, மண்ணால் செய்யப்பட்ட பொம்மை உருவத்திலோ, சிவபெருமானை தொடர்ந்து 21 நாட்களுக்கு பூஜை செய்து பெண்கள் வழிபட வேண்டும்.
நேற்று, கேதாரி கவுரி விரதத்தை முன்னிட்டு கிருஷ்ணகிரியில் உள்ள நேதாஜி ரோடு கடைவாசல் மாரியம்மன் கோயில், சென்னை சாலை பெரியமாரியம்மன் கோயில், ராசுவீதி துளுக்காணி மாரியம்மன் கோயில், ஜோதிவிநாயகர் கோயில் தெருவில் உள்ள முத்துமாரியம்மன் கோயில்களில், பெண்கள் விரதம் இருந்து அதிரசத்தைக் கொண்டு சென்று பூஜைகள் செய்து வழிபட்டனர்.
இதே போல், கிருஷ்ணகிரி பழையபேட்டை அங்காளம்மன் கோயிலில், 21 எண்ணிக்கை கொண்ட அதிரசம், வடை, வாழைப்பழம், பாக்கு, வெற்றிலை உள்ளிட்ட பொருட்களை வைத்து பூஜை செய்து சுவாமியை வணங்கி நோன்பை நிறைவு செய்தனர்.
வழக்கமாக, 500-க்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்க சிறப்பு பூஜை மற்றும் வழிபாடுகள் நடப்பது வழக்கம். ஆனால் நேற்று மாலை சூரிய கிரகணம் தோன்றுவதையொட்டி, பகல் 11 மணி முதல் பெண்கள் தனித்தனியாக கோயிலுக்கு சென்று அதிரசம் படைத்து வேண்டுதல் நிறைவேற்றி வீட்டிற்கு சென்றனர்.
இதையொட்டி சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. இதே போல் மாவட்டத்தில் உள்ள பல்வேறு அம்மன் கோயில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.