நெய்வேலி ஓட்டல் உரிமையாளர் கொலை 2 வாலிபர்கள் சிக்கினர்: தலைமறைவு குற்றவாளிகளுக்கு வலை வீச்சு
- நெய்வேலி நீதிமன்றம் பின்புற சாலையில் வந்து போது, கண்ணனை மர்ம நபர்கள் கல்லால் அடித்தனர்.
- அவர்கள் கண்ணனை நோட்டமிட்டதும் போலீசாருக்கு தெரியவந்தது.
கடலூர்:
நெய்வேலி வட்டம் 20-ல் வசித்து வந்தவர் கண்ணன் (வயது 56). இவருக்கு திருமணமாகி மனைவி, ஒரு மகள், 2 மகன்கள் உள்ளனர். நெய்வேலி சூப்பர் பஜாரில் கண்ணன் பிரியாணி கடை நடத்தி வந்தார். நேற்று இரவு கடையை மூடிவிட்டு வீட்டிற்கு வ்ந்து கொண்டிருந்தார். நெய்வேலி நீதிமன்றம் பின்புற சாலையில் வந்து போது, கண்ணனை மர்ம நபர்கள் கல்லால் அடித்தனர். உடனே தனது மோட்டார் சைக்கிளை நிறுத்தி சுற்றும் முற்றும் பார்த்துள்ளார். அங்கு திடீரென வந்த மர்மகும்பல் கண்ணனை சரமாரியாக கத்தியால் வெட்டி அவரது முகத்தை சிதைத்தது. இதில் கீழே விழுந்த கண்ணன், சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த நெய்வேலி தெர்மல் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து கண்ணன் உடலை மீட்டு என்.எல்.சி. மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். இதில் கடந்த ஆகஸ்ட் 15-ந் தேதி காப்பான்குளம் கிராமத்தை சேர்ந்தவர்கள் கண்ணனின் ஓட்டலுக்கு வந்து பிரியாணியை கடனாக கேட்டு தகராறு செய்துள்ளனர். இதில் ஓட்டல் உரிமையாளரான கண்ணனை அந்த நபர்கள் கத்தியால் வெட்டினர். இது தொடர்பான சி.சி.டி.வி. காட்சியை வைத்து 2 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். தற்போது அவர்கள் ஜாமீனில் வெளியில் வந்துள்ளதும், அவர்கள் கண்ணனை நோட்டமிட்டதும் போலீசாருக்கு தெரியவந்தது. இதையடுத்து ஜாமீனில் வந்த 2 பேரை போலீசார் தேடினர். அவர்கள் தலைமறைவான விஷயம் போலீசாருக்கு தெரியவந்தது. அவர்களுடன் சுற்றித் திரிந்த காப்பான்குளத்தை சேர்ந்த எழில் (வயது 22), நெய்வேலியை சேர்ந்த சல்மான்கான் (25) ஆகியோரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், ஜாமீனில் வெளிவந்து தலைமறைவாகியுள்ள நபர்களையும் தேடி வருகின்றனர். இந்த கொலை சம்பவம் நெய்வேலி பகுதி வியாபாரிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.