உள்ளூர் செய்திகள்

மேயர் சரவணன், துணை மேயர் ராஜூ ஆகியோர் பொருட்காட்சிக்கு கால்கோள் நாட்டிய காட்சி.

நெல்லையில் அடுத்த மாதம் அரசு சார்பில் பொருட்காட்சி-45 நாட்கள் நடக்கிறது

Published On 2022-07-28 09:45 GMT   |   Update On 2022-07-28 09:45 GMT
  • நெல்லை மாநகரில் எஸ்.என். ஹை ரோட்டில் மாநகராட்சி அலுவலகம் எதிரே ஆண்டுதோறும் அரசு சார்பில் பொருட்காட்சி அமைக்கப்படுவது வழக்கம்.
  • ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் தற்போது அந்த இடத்தில் வணிக வளாகம் கட்டப்பட்டு வருவதால் பொருட்காட்சி நடத்த முடியாமல் போய்விட்டது.

 நெல்லை:

நெல்லை மாநகரில் எஸ்.என். ஹை ரோட்டில் மாநகராட்சி அலுவலகம் எதிரே ஆண்டுதோறும் அரசு சார்பில் பொருட்காட்சி அமைக்கப்படுவது வழக்கம்.

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் தற்போது அந்த இடத்தில் வணிக வளாகம் கட்டப்பட்டு வருவதால் பொருட்காட்சி நடத்த முடியாமல் போய்விட்டது.இதற்கு இடையே கொரோனா காரணமாகவும் கடந்த 2 ஆண்டுகளாக பொருட்காட்சி நடத்தப்படவில்லை.

இந்நிலையில் இந்த ஆண்டு அரசின் திட்டங்களை கொண்டு சேர்க்கும் வகையில் பொருட்காட்சி நடத்த வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வந்தனர்.

அதன் அடிப்படையில் வ. உ. சி. மணிமண்டபம் பின்புறம் தனியாருக்கு சொந்தமான இடத்தில் பொருட்காட்சி அமைக்க மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநகராட்சி நிர்வாகம் ஆகியவை முடிவு செய்தது.

இதையடுத்து அந்த இடத்தில் பொருட்காட்சி நடத்துவதற்கான பூமி பூஜை இன்று நடத்தப்பட்டது. இந்த விழாவில் மாநகராட்சி மேயர் சரவணன் மற்றும் துணை மேயர் கே. ஆர் .ராஜு ஆகியோர் கலந்து கொண்டு பொருட்காட்சிக்கான கால்கோள் நாட்டினர்.

இதில் தி.மு.க. முன்னாள் கவுன்சிலர் சுரேஷ், மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ஜெய அருள்பதி, மாநகராட்சி செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ஆறுமுக செல்வி மற்றும் அதிகாரிகள், நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

விழாவின் போது மேயர் சரவணன் கூறுகையில், கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா காரணமாக அரசு சார்பில் பொருட்காட்சி நடத்தப்படவில்லை. இதனால் இந்த ஆண்டு அடுத்த மாதம் பொருட்காட்சியை சிறப்பான முறையில் நடத்த திட்டமிட்டுள்ளோம்.

அதன் அடிப்படையில் அனைத்து துறை சார்பிலும் அரங்குகள் அமைக்கப்பட உள்ளது. அரசின் திட்டங்களினால் கிடைக்கும் பலன்களை மக்கள் அறியும் வகையில் 45 நாட்கள் இந்த பொருட்காட்சி நடைபெறுகிறது.

அரசு துறை சார்பில் 32 அரங்குகள் அமைக்கப்படும். இது தவிர தனியார் சார்பிலும் ஏராளமான அரங்குகள் அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றார்.

Tags:    

Similar News