உள்ளூர் செய்திகள்

தீக்குளிக்க முயன்ற இளம்பெண் ரம்யா மீது, தண்ணீர் ஊற்றிய பெண் போலீசார்.

வாழப்பாடி போலீஸ் நிலையம் அருகே இளம்பெண் தீக்குளிக்க முயற்சி

Published On 2022-06-27 09:39 GMT   |   Update On 2022-06-27 09:39 GMT
  • வாழப்பாடி அடுத்த வேப்பிலைப்பட்டி கிராமத்தில் தகாத உறவுக்கு அழைத்த மாமனாரை கைது செய்யக்கோரி போலீஸ் நிலையம் அருகே உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
  • தனது உடலில் பெட்ரோலை ஊற்றி தீக்குளிக்க முயற்சித்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

வாழப்பாடி:

வாழப்பாடி அடுத்த வேப்பிலைப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ரம்யா (வயது 25). இவருக்கும் அதே கிராமத்தைச் சேர்ந்த வெங்கடேஸ்வரன்(38), என்பவருக்கும் 9 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்த தம்பதியருக்கு 5 வயதில் ஒரு மகனும், 8 வயதில் ஒரு மகளும் உள்ளனர். வெங்கடேஸ்வரன் லாரி டிரைவராக உள்ளார்.

கணவர் வேலைக்கு சென்று விட்ட நேரத்தில், மாமனார் பச்சமுத்து (67), தன்னை தகாத உறவுக்கு அழைத்ததாகவும், இதற்கு மாமியார் தனலட்சுமி உடந்தையாக இருப்பதாகவும், இளம்பெண் ரம்யா கடந்த 20-ந் தேதி வாழப்பாடி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், தலைமறைவான மாமனார் பச்சமுத்து மற்றும் மாமியார் தனலட்சுமி ஆகிய இருவரையும் தேடி வருகின்றனர். இந்நிலையில், புகார் கொடுத்து ஒரு வாரம் கடந்த நிலையிலும், தன்னை மானபங்கம் செய்ய முயன்ற மாமனார், உடந்தையாக இருந்த மாமியார் மற்றும் இதனைத் தட்டிக் கேட்காத கணவர் ஆகிய மூவரையும் கைது செய்து நடவடிக்கை எடுக்காத போலீசாரை கண்டித்து, இளம்பெண் ரம்யா, இன்று தனது குழந்தைகளுடன் வாழப்பாடி அனைத்து மகளிர் காவல் நிலையம் முன், கடலூர் சாலையில் உறவினர்களுடன் திடீரென அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டார். தனது உடலில் பெட்ரோலை ஊற்றி தீக்குளிக்க முயற்சித்தார். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, ரம்யா மீது தண்ணீரை ஊற்றினர். புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படுவதாக உறுதியளித்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News