குள்ளனூர் ஏரி நிரம்பியதால் கிடா வெட்டி, மலர்கள் தூவி வழிபட்ட கிராமமக்கள்.
போச்சம்பள்ளி அருகே 40 ஆண்டுகளுக்கு பிறகு நிரம்பிய குள்ளனூர் சித்தேரி ஏரி -மலர்தூவி வழிபாடு செய்த கிராம மக்கள்
- குள்ளனூர் சித்தேரி ஏரி தண்ணீர் நிரம்பி இன்று வெளியேறியது.
- கிடா வெட்டி ,இனிப்புகள் வழங்கி தண்ணீரில் மலர் தூவி வரவேற்றனர்.
மத்தூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த குள்ளனூர் கிராமத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர் துறைக்கு சொந்தமான குள்ளனூர் சித்தேரி ஏரி சுமார் 30 ஏக்கர் பரப்பளவில் உள்ளது. இந்த ஏரி கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக தண்ணீர் இல்லாமல் புதர் மண்டி வறண்டு காணப்பட்டது.
கடந்த சில மாதங்களாக பரவலாக மழை பெய்து வந்த நிலையில் போச்சம்பள்ளி சுற்று வட்டாரங்களில் உள்ள ஏரிகளில் தண்ணீர் நிரம்பி காணப்பட்டது. இதனால் தற்பொழுது போச்சம்பள்ளி பகுதிகளில் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்து வருகிறது.
இதனால் ஊராட்சி நிர்வாகம் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக எரிக்கரைகளை சீர் செய்து தண்ணீர் தேங்கும் வகையில் வேலைபாடுகள் செய்து தண்ணீர் தேங்கி வந்த நிலையில் குள்ளனூர் சித்தேரி ஏரி தண்ணீர் நிரம்பி இன்று வெளியேறியது.
நிரம்பிய தண்ணீர் வெளியே செல்ல கிராம மக்கள் ஜெ.சி.பி. எந்திரம் மூலமாக கால்வாய் தூர் வாரி பாதை அமைத்தனர். பின்னர் ஏரியில் தண்ணீர் நிரம்பிய மகிழ்ச்சியில் கிராம மக்கள் ஏரியின் கரையில் பூஜை செய்து ,கிடா வெட்டி ,இனிப்புகள் வழங்கி தண்ணீரில் மலர் தூவி வரவேற்றனர்.
இதில் போச்சம்பள்ளி ஊராட்சி மன்ற தலைவர் சாந்தமூர்த்தி, சீனிவாசன், ஊர் முக்கியஸ்தர்கள் செந்தில் சண்முகம் தூயமணி, செல்வம் ஊராட்சி குழு துணை தலைவர் அருள், மற்றும் கிராம மக்கள் கலந்து கொண்டனர்.