ஜேடர்பாளையம் வன்முறை சம்பவங்கள் தொடர்பாகபோலீசார் சார்பில் பொதுமக்களிடம் கருத்து கேட்பு, ஆலோசனை கூட்டம்
- பொது மக்களின் கருத்துக்களை அறிவதற்காக பாதிக்கப்பட்ட 2 சமூக மக்கள் மற்றும் போலீஸ் அதிகாரிகள் கலந்து கொள்ளும் முத்தரப்பு கூட்டம் சிறுநல்லிகோவில் மாரியம்மன் கோவிலில் நடைபெற்றது.
- கூட்டத்திற்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்னன் தலைமை வகித்தார்.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா ஜேடர்பாளையம் சுற்று வட்டார பகுதிகளில் நடந்த பல்வேறு வன்முறை சம்பவங்கள் குறித்து பொது மக்களின் கருத்துக்களை அறிவதற்காக பாதிக்கப்பட்ட 2 சமூக மக்கள் மற்றும் போலீஸ் அதிகாரிகள் கலந்து கொள்ளும் முத்தரப்பு கூட்டம் சிறுநல்லிகோவில் மாரியம்மன் கோவிலில் நடைபெற்றது.
சமூக விரோதிகள்
கூட்டத்திற்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்னன் தலைமை வகித்தார். கூட்டத்தில் இரு சமூகம் சார்ந்த பொதுமக்கள் கலந்துகொண்டு தங்களது கருத்துக்களை எடுத்துக் கூறினர்.
அப்போது அவர்கள் கூறுகையில், இந்த பகுதியில் இரு சமூகத்தைச் சேர்ந்த மக்களும் ஒற்றுமையாக இருப்பதாகவும் ஒரு சில சமூக விரோதிகள் இரு தரப்பினர் மோதல் கொள்ளும் வகையில் இந்த வன்முறை சம்பவங்களை திட்டமிட்டு செய்கிறார்கள் என்றனர். மேலும் வதந்திகளுக்கு இடம் அளிக்காமல் குற்றவாளிகள் பற்றி தகவல் தெரிந்தால் போலீசாருக்கு தகவல் தரவும் பொதுமக்கள் உறுதி அளித்தனர்.
ஒத்துழைப்பு
ஜேடர்பாளையம் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ந்து ஆங்காங்கே வன்முறை சம்பவங்கள், அசம்பாவித சம்பவங்கள் நடைபெற்று வருவதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். ஆங்காங்கே வாழை மரங்களை வெட்டுதல், டிராக்டர்களுக்கு தீ வைத்தல், பாக்கு மரங்களை வெட்டுதல் போன்றவை நடைபெற்று வருகிறது. இது சம்பந்தமான தகவல்கள் கிடைத்தால் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். அவ்வாறு தகவல் கொடுத்தவர்களின் பெயர்கள் ரகசியம் பாதுகாக்கப்படும்.
எனவே பொதுமக்கள் போலீசாருக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன் பொதுமக்களிடம் தெரிவித்தார். கூட்டத்தில் போலீஸ் அதிகாரிகள், சிறுநல்லி கோவில் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த இரு சமூக பொதுமக்கள் கலந்து கொண்டனர்.