உள்ளூர் செய்திகள்

2½ வயது பெண்குழந்தை கொலை: வாயில் மதுவை ஊற்றிய கொடூரம்-தாய்-3 வாலிபர்கள் கைது

Published On 2025-04-25 11:40 IST   |   Update On 2025-04-25 11:40:00 IST
  • சிறுமியின் உதடு, கை உள்ளிட்ட இடங்களில் காயங்கள் இருந்ததால் டாக்டர்கள் சந்தேகம்.
  • சிறுமி அடித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவம் தெரியவந்தது.

திசையன்விளை:

நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள துவரம்பாடு கிராமத்தை சேர்ந்தவர் சரத். இவரது மனைவி பிருந்தா (வயது 25). இவர்கள் 2 பேரும் காதலித்து வந்த நிலையில் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு தர்ஷினி என்ற 2½ வயது பெண் குழந்தை உள்ளது.

சரத் கோவையில் உள்ள ஒரு பொம்மை கடையில் வேலை பார்த்து வருகிறார். இதனால் பிருந்தா தனது குழந்தையுடன் திசையன்விளை அருகே உள்ள மகாதேவன் குளத்தில் வசித்து வருகிறார்.

இந்நிலையில் நேற்று காலை பிருந்தா நடுவக்குறிச்சியில் உள்ள தனது தாய் வீட்டுக்கு சென்றுள்ளார். அப்போது கையில் வைத்திருந்த தனது குழந்தை தர்ஷினி இறந்துவிட்டதாக கூறினார். அவரது பேச்சில் சந்தேகம் அடைந்த பெற்றோர், உடனே குழந்தையை திசையன்விளை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிறுமியை பரிசோதனை செய்த டாக்டர்கள் குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

அதேநேரத்தில் சிறுமியின் உதடு, கை உள்ளிட்ட இடங்களில் காயங்கள் இருந்ததால் டாக்டர்கள் சந்தேகம் அடைந்து திசையன்விளை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து வந்து சிறுமி உடலை பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தொடர்ந்து பிருந்தாவை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று நடத்திய விசாரணையில் சில வாலிபர்களுடன் உல்லாசமாக இருந்தபோது இடையூறாக இருந்ததால் சிறுமி அடித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவம் தெரியவந்தது.

காதல் திருமணம் செய்து கொண்ட போதிலும், பிருந்தாவுக்கு பல வாலிபர்களுடன் தொடர்பு இருந்து வந்துள்ளது. அவ்வப்போது அவர்களுடன் தனிமையான இடங்களுக்கு சென்று உல்லாசம் அனுபவித்து வந்துள்ளார். அப்போது குழந்தையை தனியாக வீட்டில் விட்டு விட்டு செல்ல முடியாது என்பதால் குழந்தையையும் அழைத்து செல்வதை வழக்கமாக வைத்துள்ளார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு திசையன்விளை அருகே உள்ள துவரம்பாடு பகுதியை சேர்ந்த ஐஸ்கிரீம் கடை நடத்தி வரும் வாலிபரான லிங்கசெல்வம் (28 ) என்பவர் தனது நண்பர்களான அதே பகுதியை சேர்ந்த முத்துசுடர் (28), பெஞ்சமின் (28) ஆகியோருடன் மதுபோதையில் பிருந்தா வீட்டிற்கு சென்றுள்ளார்.

அங்கிருந்து குழந்தையுடன் பிருந்தாவை 3 பேரும் அழைத்துச்சென்றுள்ளனர். பின்னர் திசையன்விளையை அடுத்த வாழைத்தோட்டம் கிராமத்தில் இருட்டு நிறைந்த பகுதியில் அந்த வாலிபர்களுடன் உல்லாசமாக இருந்துள்ளார். அப்போது சிறுமி தர்ஷினி அழுதுள்ளார். உடனே அவர்களில் 2 வாலிபர்கள் தர்ஷினியை சற்று தூரத்திற்கு அழைத்து சென்று தின்பண்டம் கொடுத்துள்ளனர்.

மேலும் அவர்கள் 2 பேரும் அங்கிருந்தபடி மது குடித்துக்கொண்டு இருந்தனர். சிறுமி தின்பண்டம் சாப்பிட்டதும் குடிக்க தண்ணீர் கேட்டுள்ளார். போதையில் இருந்த வாலிபர்கள், சிறுமி என்றும் பாராமல் குளிர்பானத்தில் மதுவை கலந்து சிறுமிக்கு கொடுத்துள்ளனர். அதனை குடித்த சிறுமி அழுதுள்ளார்.

இதனால் ஆத்திரம் அடைந்த வாலிபர்கள் சிறுமியின் மூக்கை பொத்தியும், தாக்கியும் கொலை செய்துள்ளனர். இதனால் மூச்சு பேச்சு இல்லாமல் போன சிறுமியை வாலிபர்கள் 3 பேரும் சேர்ந்து பிருந்தாவிடம் ஒப்படைத்து விட்டு சென்றுவிட்டனர். என்ன செய்வதென்று தெரியாமல் தனது குழந்தை கட்டிலில் இருந்து தவறி விழுந்து இறந்துவிட்டதாக பெற்றோரிடம் பிருந்தா நாடகமாடியது தெரியவந்தது.

இதையடுத்து பிருந்தாவை கைது செய்த போலீசார், கள்ளக்காதலில் ஈடுபட்டு சிறுமியையும் கொலை செய்த லிங்க செல்வன், முத்து சுடர், பெஞ்சமின் உள்ளிட்டவர்களையும் கைது செய்தனர்.

Tags:    

Similar News