மேல்மலையனூர் அருகே காணாமல் போன பிளஸ்-1 மாணவி கிணற்றில் பிணமாக மீட்பு
- கடந்த 3 நாட்களாக காணவில்லை என்று பெற்றோர்கள் வளத்தி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்திருந்தனர்.
- ராஜேஸ்வரி எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விழுப்புரம்:
மேல்மலையனூர் அருகே கொடுக்கன்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் கலைச்செல்வன் விவசாயி. இவருடைய மகள் ராஜேஸ்வரி(வயது16) மேல்மலையனூர் அரசினர் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-1 படித்து வருகிறார். இவர் கடந்த 3 நாட்களாக காணவில்லை என்று பெற்றோர்கள் வளத்தி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்திருந்தனர். இந்நிலையில் இன்று கொடுக்கன்குப்பம் துளசி என்பவருக்கு சொந்தமான கிணற்றில் பிணமாக மிதந்துள்ளார். இதுகுறித்து மேல்மலையனூர் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.
இதன்பேரில் நிலைய அலுவலர் சாமள வண்ணன் தலைமையில் வீரர்கள் சென்று 30 அடி ஆழமுள்ள கிணற்றிலிருந்து ராஜேஸ்வரியின் உடலை மீட்டு இன்ஸ்பெக்டர் சுரேஷ்பாபுவிடம் ஒப்படைத்தனர். பின்பு பிரேத பரிசோதனைக்காக செஞ்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். இது குறித்து போலீசார் வழக்குபதிவு செய்து ராஜேஸ்வரி எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.