தீக்குளிக்க முயன்றவர்களின் உடலில் தண்ணீர் ஊற்றிய போலீசார்.
மனைவி- தாயுடன் தீக்குளிக்க முயன்ற வாலிபர்
- அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி காமராஜரிடம் இருந்து ரூ.16 லட்சத்து 40 ஆயிரம் வரை பணம் பெற்றுக்கொண்டு வேலை வாங்கி தராமல் மோசடி செய்ததாக கூறப்படுகிறது.
- மோசடி புகார் தொடர்பாக விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்த பின்னர் அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.
தரங்கம்பாடி:
தரங்கம்பாடி தாலுக்கா திருக்கடையூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் ஊழியராக துர்காதேவி என்பவர் பணிபுரிந்து வருகிறார்.
இவர் கடந்த 2019 ஆம் ஆண்டு அதே பகுதியை சேர்ந்த காமராஜ் என்பவரின் மகன் விக்னேஸ்வரனுக்கு அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி காமராஜரிடம் இருந்து ரூ.16 லட்சத்து 40 ஆயிரம் வரை பணம் பெற்றுக்கொண்டு வேலை வாங்கி தராமல் மோசடி செய்ததாக கூறப்படுகிறது.
பாதிக்கப்பட்ட காமராஜ் பணத்தை திருப்பி கேட்டபோது தொடர்ந்து பணத்தை தராமல் அலைக்கழித்ததாகவும், அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இதனால் மன உளைச்சலுக்கு உள்ளான காமராஜ் நேற்று திருக்கடையூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி அலுவலகம் முன்பு தனது மனைவி மற்றும் தாயுடன் தீக்குளிக்க முயன்றுள்ளார் .
தொடர்ந்து மண்ணெண்ணையை தனது உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்ற போது போலீசார் தடுத்து அவர்கள் மீது தண்ணீரை ஊற்றினர்.
மோசடி புகார் தொடர்பாக விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்த பின்னர் அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். இச்சம்பவம் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.