திருமணம் நிச்சயிக்கப்பட்ட இளம்பெண் திடீர் தற்கொலை - உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்
- சின்ராஜ் ரம்யாவுடன் நீண்ட நேரம் பேசிவிட்டு அதன்பிறகு அங்கிருந்து சென்றுள்ளார்.
- சின்ராஜ் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பூர் :
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பெல்லம்பட்டி பகுதியை சேர்ந்த கோபால்- மாசாணி தம்பதியரின் மகள் ரம்யா(வயது 23). இவருக்கும் பனப்பாளையம் பகுதியை சேர்ந்த கோபால் மகன் சின்ராஜ் (25) என்பவருக்கும் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு திருமணம் நிச்சயிக்கப்பட்டது.
இதையடுத்து ரம்யா வும், சின்ராஜூவும் தினமும் செல்போனில் பேசி வந்தனர். நேற்று ரம்யாவின் பெற்றோர் உறவினர்களுக்கு திருமண பத்திரிகை வழங்குவதற்காக சென்று விட்டனர். அப்போது அங்கு வந்த சின்ராஜ் ரம்யாவுடன் நீண்ட நேரம் பேசிவிட்டு அதன்பிறகு அங்கிருந்து சென்றுள்ளார்.
நேற்று மாலை ரம்யாவின் பெற்றோர் வீட்டிற்கு வந்து பார்த்த போது ரம்யா வீட்டிற்குள் தூக்குப்போட்ட நிலையில் பிணமாக தொங்கினார். இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் இது குறித்து தாராபுரம் போலீசில் புகார் செய்தார்.
இதையடுத்து இன்ஸ்பெக்டர் மணிகண்டன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். பின்னர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தாராபுரம் அரசு ஆஸ்பத்தி ரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. ஆனால் இன்று காலை ரம்யாவின் உறவினர்கள் உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுப ட்டனர்.
சின்ராஜ் பேசி விட்டு சென்ற பிறகுதான் ரம்யா தற்கொலை செய்துள்ளார். எனவே சின்ராஜ் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் தாராபுரம் அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.