உள்ளூர் செய்திகள்

கோயம்பேடு மார்க்கெட்டில் தானியங்கி மஞ்சப்பை விற்பனை எந்திரம்

Published On 2022-06-07 03:27 GMT   |   Update On 2022-06-07 03:27 GMT
  • கோயம்பேடு மார்க்கெட்டில் மஞ்சப்பை விற்பனை செய்யும் தானியங்கி எந்திரம் அமைக்கப்பட்டு உள்ளது.
  • தானியங்கி எந்திரத்தில் 10 ரூபாய் நோட்டு, நாணயம் செலுத்தினால் மஞ்சப்பை பெற்றுக்கொள்ளலாம்.

சென்னை:

தமிழகத்தில் ஒரு முறை மட்டுமே பயன்படுத்தப்படும் 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு அரசு தடை விதித்து உள்ளது.

பிளாஸ்டிக் பைகளை ஒழிக்கும் வகையில் அதற்கு மாற்றாக துணி பைகளை உபயோகிக்கும் பழக்கத்தை மக்களிடம் அதிகரிக்க செய்யும் வகையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 'மீண்டும் மஞ்சப்பை' திட்டத்தை தொடங்கி வைத்தார்.

இந்த நிலையில் ஆசியாவிலேயே மிகப்பெரிய சந்தையாக விளங்கும் கோயம்பேடு மார்க்கெட்டில் பிளாஸ்டிக் பைகள் பயன்பாட்டை தவிர்க்க வியாபாரிகளுடன் இணைந்து பெருநகர சென்னை மாநகராட்சி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன்படி சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு மக்கள் அதிகமாக கூடும் கோயம்பேடு மார்க்கெட்டில் 'மஞ்சப்பை' விற்பனை செய்யும் தானியங்கி எந்திரம் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த எந்திரத்தில் 10 ரூபாய் நோட்டு, நாணயம் செலுத்தினால் 'மஞ்சப்பை' பெற்றுக்கொள்ளலாம்.

கோயம்பேடு பூ மார்க்கெட் வளாகத்தில் அமைக்கப்பட்டு உள்ள தானியங்கி 'மஞ்சப்பை' விற்பனை எந்திரத்தை வனத்துறை கூடுதல் தலைமை செயலாளர் சுப்ரியா சாகு, பொதுமக்கள் பயன்பாட்டுக்கு தொடங்கி வைத்தார். மேலும் அதன் அருகிலேயே உபயோகிக்கப்பட்ட குடிநீர் மற்றும் குளிர்பான பிளாஸ்டிக் பாட்டில்களை போடுவதற்கு தனியாக மற்றொரு எந்திரமும் வைக்கப்பட்டு உள்ளது. அதனையும் அவர் திறந்து வைத்தார்.

Tags:    

Similar News