மாஞ்சோலையில் அரசுப்பள்ளி வளாகத்தை சுத்தப்படுத்திய மணிமுத்தாறு சிறப்பு காவலர்கள்
- நெல்லை மாவட்ட முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்றான மாஞ்சோலையில் அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது.
- சுமார் 65-க்கும் மேற்பட்ட சிறப்பு காவலர்கள், அதிகாரிகள் பள்ளி வளாகத்தை சுத்தம் செய்தனர்.
கல்லிடைக்குறிச்சி:
மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள நெல்லை மாவட்ட முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்றான மாஞ்சோலையில் அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது. இதன் வளாகத்திலும், அதை சுற்றி உள்ள பகுதிகளிலும் குப்பைகள், முட்செடிகள் வளர்ந்து புதர்மண்டி கிடந்ததால் பள்ளியை சுற்றி விஷப்பூச்சிகள் அடிக்கடி வந்து குழந்தைகளுக்கு இடையூறாக இருந்ததுடன் அச்சுறுத்தலாகவும் இருந்தது.
இதனால் பள்ளி நிர்வாகத்தினர் மணிமுத்தாறு தமிழ்நாடு சிறப்பு காவல்படை 12-ம் அணி தளவாய் கார்த்திகேயனிடம் கேட்டு கொண்டதின் பேரில், 12-ம் அணி, 9-ம் அணியை சேர்ந்த சுமார் 65-க்கும் மேற்பட்ட சிறப்பு காவலர்கள், அதிகாரிகள் பள்ளி வளாகத்தை சுத்தம் செய்தனர். பள்ளி நிர்வாகத்தின் சார்பாக பட்டாலியன் போலீசாருக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. இதில் 12-ம் அணி தளவாய் கார்த்திகேயன், உதவி தளவாய் மனோகரன், காவல் அதிகாரிகள், ஆளிநர்கள், சிறப்பு காவலர்கள் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.