போலீஸ் எழுத்து தேர்வு: 11 ஆயிரம் பேர் எழுதுகின்றனர்
- மதுரையில் நாளை போலீஸ் எழுத்து தேர்வை 11 ஆயிரம் பேர் எழுதுகின்றனர்.
- மதுரை மாவட்டத்தின் 12 தேர்வு மையங்களிலும், 1200 போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
மதுரை
தமிழகத்தில் 2022 பணியிடங்களுக்கான 2-ம் நிலை காவலர் உடல் தகுதி தேர்வு சில வாரங்களுக்கு முன்பு நடந்தது. நாளை (26-ந் தேதி) எழுத்து தேர்வு நடக்கிறது. இதற்காக மதுரை மாவட்டத்தில் 12 மையங்கள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன.
இங்கு 11 ஆயிரத்து 500 பேர் எழுத்து தேர்வை எழுதுகின்றனர். இதில் 6,926 பேர் ஆண்கள், 4,572 பேர் பெண்கள், 2 பேர் மாற்றுத் திறனாளிகள் ஆவர்.
இதுகுறித்து மாநகர போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், 2-ம் நிலை எழுத்து தேர்வுக்கு நுழைவுசீட்டு பெற்றவர்கள் குறித்த நேரத்துக்கு முன்பாக தேர்வு மையத்தில் ஆஜராக வேண்டும். கருப்பு அல்லது நீலநிற பந்துமுனை பேனா, நுழைவுசீட்டு, எழுத்து அட்டை தவிர வேறு எந்த பொருட்களும் தேர்வு மையத்திற்க்குள் அனுமதிக்கப்பட மாட்டாது. அந்த பொருட்களை தேர்வு மையத்திற்கு வெளியில் ஒப்படைத்து விட்டு, பரீட்சை முடிந்த பிறகு திரும்ப பெற்றுக் கொள்ள வேண்டும் என்று தெரிவித்தனர்.
மதுரை மாவட்டத்தில் நாளை நடைபெறும் காவலர் எழுத்து தேர்வுக்கான ஏற்பாடுகளை மாநகர போலீஸ் கமிஷனர் செந்தில் குமார் தலைமையில் துணை கமிஷனர் வனிதா மற்றும் போலீஸ் அதிகாரிகள் செய்து வருகின்றனர்.