வீடுகளுக்குள் கழிவுநீர் புகுந்ததால் பொதுமக்கள் சாலை மறியல்
- வீடுகளுக்குள் கழிவுநீர் புகுந்ததால் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
- ஒரு மணி நேரத்தில் ஜே.சி.பி. கொண்டு வரப்பட்டு சாக்கடை அடைப்பு சீரமைக்கப்பட்டது.
அவனியாபுரம்
மதுரை அவனி யாபுரத்தில் கடந்த ஒரு வார காலமாக முக்கிய சாலையாக இருக்கும் பகுதியில் சாக்கடை அடைப்பு ஏற்பட்டது. இதன் காரணமாக கருத்தான் சேர்வை தெருவில் வீடுகளுக்குள் கழிவுநீர் புகுந்தது. இதனால் பொதுமக்கள் அவதிப்பட்டனர்.
இதை கண்டித்து இன்று காலை பொதுமக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அவனியாபுரத்தில் இருந்து பெருங்குடி, விமான நிலையம், காரியாபட்டி செல்லும் அரசு பஸ்கள் மேற்கொண்டு செல்ல முடியாமல் நின்றது.
தகவலறிந்த அவனியா புரம் காவல் நிலைய சப்- இன்ஸ்பெக்டர் பாண்டி கவுன்சிலர்கள் கருப்புசாமி, முத்துலட்சுமி அய்யனார், உதவி பொறியாளர் முனீர் அகமது, நிர்வாக உதவி பொறியாளர் மைலநாதன், நெடுஞ்சாலைத்துறை ஆய்வாளர் கணேசன் ஆகியோர் பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.
அதன் பிறகு மறியல் கைவிடப்பட்டது. பின்னர் ஒரு மணி நேரத்தில் ஜே.சி.பி. கொண்டு வரப்பட்டு சாக்கடை அடைப்பு சீரமைக்கப்பட்டது.