உள்ளூர் செய்திகள்

கைதான தினேஷ்குமார்.

கண்மாய் கரையில் கஞ்சா செடி வளர்த்தவர் கைது

Published On 2022-12-13 08:21 GMT   |   Update On 2022-12-13 08:21 GMT
  • கண்மாய் கரையில் கஞ்சா செடி வளர்த்தவர் கைது செய்யப்பட்டார்.
  • ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் கஞ்சாவை இறக்குமதி செய்து இங்கு விற்பனை செய்து வந்துள்ளார்.

மதுரை

மதுரையில் கண்மாய் கரையில் கஞ்சா பயிரிடப்படுவதாக போலீசுக்கு ரகசிய தகவல் வந்தது. அதில் தொடர்புடையவர்களை கைது செய்ய வேண்டும் என்று மாநகர போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் உத்தரவிட்டார்.

அவரது உத்தரவின் பேரில் மதுரை வடக்கு போலீஸ் துணை கமிஷனர் மோகன்ராஜ் மேற்பார்வையில், உதவி கமிஷனர் விஜயகுமார் மற்றும் போலீசார் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது. அவர்கள் செல்லூர் பகுதியில் ரகசியமாக விசாரணை நடத்தினர்.

அப்போது தாகூர் நகர் கண்மாய் கரையில் கஞ்சா பயிரிடப்பட்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து தனிப்படை போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பார்த்தபோது அங்கு ஒரு வாலிபர் பதுங்கியிருந்தார். அவரை போலீசார் மடக்கி பிடித்தனர். அவரிடம் 1.125 கிலோ கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

இதனைத்தொடர்ந்து போலீசார் அந்த பகுதியை ஆய்வு செய்தனர். அப்போது அங்கு கஞ்சா செடிகள் இருந்தது. இதனைத்தொடர்ந்து போலீசார் அவரை போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரித்தனர். அப்போது அவர் செல்லூர் மணவாளன் நகரை சேர்ந்த தினேஷ்குமார் என்ற அறிவு (வயது 27) என்பது தெரியவந்தது.

அவர் ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் கஞ்சாவை இறக்குமதி செய்து இங்கு விற்பனை செய்து வந்துள்ளார். இதில் அவருக்கு அதிக லாபம் கிடைத்துள்ளது. தினேஷ்குமார் கண்மாய் கரையில் உட்கார்ந்து கஞ்சா புகைப்பது வழக்கம். அங்கு ஒரு சில விதைகள் முளைத்தன. அதில் ஒரு செடி மட்டும் பெரிதாக வளர்ந்துள்ளது.

அந்த செடியை அவர் கண்ணும் கருத்துமாக வளர்த்து வந்துள்ளார். இதனை தொடர்ந்து கஞ்சாவுடன் தினேஷ் குமாரை செல்லூர் போலீசார் கைது செய்தனர்.

Tags:    

Similar News