மதுரையில் 35,279 மாணவ-மாணவிகள் பிளஸ்-1 தேர்வு எழுதினர்
- மதுரையில் இன்று நடந்த பிளஸ்-1 தேர்வை 35,279 மாணவ-மாணவிகள் எழுதினர்.
- இந்த தேர்வு 116 மையங்களில் நடந்தது.
மதுரை
தமிழகம் முழுவதும் இன்று பிளஸ்-1 பொதுத்தேர்வு தொடங்கியது. மதுரை மாவட்டத்தில் 326 அரசு மற்றும் தனியார் மேல்நிலைப்பள்ளிகளை சேர்ந்த 17 ஆயிரத்து 56 மாணவர்கள், 18 ஆயிரத்து 223 மாணவிகள் என மொத்தம் 35 ஆயிரத்து 279 பேர் பிளஸ்-1 பொதுதேர்வு எழுதினர்.
இதற்காக மாவட்டத்தில் 116 தேர்வு மையங்கள் அமைக்கப்ப ட்டிருந்தன. இன்று காலை 10 மணிக்கு தேர்வு தொடங்கியது. ஆனால் 9.45 மாணவ, மாணவிகளின் ஹால் டிக்கெட்டுகள் ஆய்வு செய்யப்பட்டு தேர்வறைக்குள் அனுமதிக்கப் பட்டனர். இன்று தமிழ் மொழிப்பாடத் தேர்வை மாணவ-மாணவிகள் ஆர்வத்துடன் எழுதினர்.
முன்னதாக தேர்வு மையங்களை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி, உயர்அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். முறைகேடு நடப்பதை தடுக்க பறக்கும் படையும் அமைக்கப்பட்டிருந்தது. தேர்வு பணிக்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்பட்டனர்.
இந்த ஆண்டு மாற்றுத்திறன் கொண்ட 352 மாணவ-மாணவிகளும் இன்று பிளஸ்-1 தேர்வை எழுதினர். அவர்களுக்காக தேர்வெழுத உதவியாளர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர். இதேபோல் 4 மையங்களில் தனித்தேர்வர்கள் 1,231 பேர் தேர்வெழுதினர்.
சிவகங்கை மாவட்டத்தில் 7 ஆயிரத்து 76 மாணவர்களும், 8 ஆயிரத்து 398 மாணவிகளும் என மொத்தம் 15 ஆயிரத்து 474 பேர் பிளஸ்-1 தேர்வு எழுதினர். இதுதவிர 158 பேர் தனித்தேர்வர்களாக பங்கேற்றனர். விருதுநகர் மாவட்டத்தில் 10 ஆயிரத்து 240 மாணவர்களும், 11 ஆயிரத்து 796 மாணவிகளும் என மொத்தம் 22 ஆயிரத்து 36 பேர் பிளஸ்-1 தேர்வு எழுதினர். இதற்காக 50-க்கும் மேற்பட்ட தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன.