கைதான மணிகண்டன், பிரவீன்குமார்.
20 பவுன் நகை பறித்த பட்டதாரி வாலிபர் உள்பட 3 பேர் கைது
- மதுரையில் கூட்டுறவு வங்கி அதிகாரி மனைவியிடம் 20 பவுன் நகை பறித்த பட்டதாரி வாலிபர் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
- பிரவீன் மீது செல்லூர் போலீஸ் நிலையத்தில் கொலை வழக்கு, வழிப்பறி உள்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.
மதுரை
மதுரை ஆத்திகுளம், ஏஞ்சல் நகர், மருதுபாண்டியர் தெருவை சேர்ந்தவர் ஊர்க்காவலன். இவர் மதுரை மாவட்ட கூட்டுறவு வங்கியில் அதிகாரியாக வேலை பார்த்து ஓய்வு பெற்றவர் ஆவார்.
இவரது மனைவி பானுமதி (வயது 58). இவர் கடந்த 31-ந் தேதி மதியம் நரிமேடு பகுதியில் நடந்து சென்றார். மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் கும்பல், பானுமதி அணிந்திருந்த 20 பவுன் நகையை பறித்துக்கொண்டு தப்பியது.
இதில் தொடர்புடைய குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என்று மாநகர போலீஸ் கமி ஷனர் செந்தில்குமார் உத்தரவிட்டார். இதன்படி மாநகர வடக்கு துணை கமிஷனர் மோகன்ராஜ் மேற்பார்வையில், தல்லாகுளம் உதவி கமிஷனர் ஜெகன்நாதன் ஆலோசனை பேரில், இன்ஸ்பெக்டர் பாலமுருகன் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது.
அவர்கள் சம்பவ இடத்தில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு காமிரா பதிவுகளை ஆய்வு செய்தனர். இதில் மூதாட்டி பானுமதியிடம் செயின் பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்டவர், செல்லூர் ரவுடி என்பது தெரியவந்தது.
இதனைத்தொடர்ந்து போலீசார் நள்ளிரவில் செல்லூருக்கு சென்று, வீட்டில் இருந்த 17 வயது சிறுவன் உள்பட 3 பேரை பிடித்து வந்து காவல் நிலையத்தில் விசாரித்தனர்.
அவர்கள் செல்லூர் நந்தவனம், நேதாஜி தெருவை சேர்ந்த குபேந்திரன் மகன் திக்குவாய் என்ற பிரவீன்குமார் (24), செல்லூர் குமரன் தெருவை சேர்ந்த பன்னீர்செல்வம் மகன் மணிகண்டன் ( 24) மற்றும் 17 வயது சிறுவன் என்பது தெரியவந்தது.
திக்குவாய் என்ற பிரவீன் மீது செல்லூர் போலீஸ் நிலையத்தில் கொலை வழக்கு, வழிப்பறி உள்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. மணி கண்டன் பி.எஸ்.சி. பட்டதாரி ஆவார். 3 பேரையும் தல்லாகுளம் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.