உள்ளூர் செய்திகள்

வாலிபர் கொலையில் 2 பேர் கைது

Published On 2023-01-30 12:03 IST   |   Update On 2023-01-30 12:03:00 IST
  • பரவையில் வாலிபர் கொலையில் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
  • மேலும் 10-க்கும் மேற்பட்டோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மதுரை

மதுரை மாவட்டம் சமயநல்லூர் அருகே உள்ள பரவை கம்பர் தெருவைச் சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 25). இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த லாலு, சங்கர்லால் ஆகிய 2 பேருக்கும் இடையே முன் விரோதம் இருந்து வந்தது. இதனால் இவர்களுக்குள் அடிக்கடி மோதல் ஏற் பட்டது.

லாலுவின் தாத்தா நேற்று உடல்நலக்குறைவால் காலமானார். எனவே அவரது வீட்டுக்கு உறவினர்கள் ஏராளமானோர் வந்திருந்த னர். இந்த நிலையில் துக்க நிகழ்ச்சியின் போது வெங்கடேசன் மற்றும் அவரது நண்பர்கள், லாலு வீடு வழியாக சென்றுள்ளனர். இதனை பார்த்த லாலு, சங்கர்லால் ஆகியோர் வெங்கடேசனை மறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அவர்களுக்கு ஆதரவாக துக்க நிகழ்ச்சிக்கு வந்திருந்த உறவினர்களும் தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. பிரச்சினை முற்றவே, இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் வெங்கடேசன் கத்தியால் குத்தப்பட்டார். ரத்த வெள்ளத்தில் சரிந்த அவரை மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக சமயநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து வெங்கடேசனை கொலை செய்ததாக லாலு, சங்கர்லாலை கைது செய்தனர். மேலும் 10-க்கும் மேற்பட்டோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News