உள்ளூர் செய்திகள்

காதலியின் கழுத்தை இறுக்கி கொலை செய்த காதலன்

Published On 2023-04-27 04:37 GMT   |   Update On 2023-04-27 04:37 GMT
  • ஷீபாவிடம் யார் யார் செல்போனில் பேசி உள்ளனர் என்ற விவரத்தை போலீசார் சேகரித்தனர்.
  • ஷீபாவிடம் கடைசியாக பேசிய ஒரகடம் அடுத்த பண்ருட்டி பகுதியை சேர்ந்த டிரைவர் சாமுவேல் என்பவரை பிடித்து போலீசார் விசாரித்தனர்.

ஒரகடம்:

காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் ஒன்றியம் ஏலக்காய்மங்கலம் பகுதியை சேர்ந்தவர் அமல்ராஜ். இவருடைய மகள் ஷீபா (வயது 25), இவர் குன்னவாக்கம் பகுதியில் உள்ள ஒரு தனியார் தொழிற்சாலையில் வேலை செய்து வந்தார். கடந்த ஞாயிற்றுக்கிழமை வீட்டை விட்டு வெளியே சென்றார். பின்னர் வீடு திரும்பவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த ஷீபாவின் குடும்பத்தினர் ஷீபாவை காணவில்லை என ஒரகடம் போலீஸ் நிலையத்தில் நேற்று முன்தினம் புகார் அளித்தனர்.

புகாரின் பேரில் ஒரகடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கினர். விசாரணையில் ஷீபாவிடம் யார் யார் செல்போனில் பேசி உள்ளனர் என்ற விவரத்தை போலீசார் சேகரித்தனர்.

ஷீபாவிடம் கடைசியாக பேசிய ஒரகடம் அடுத்த பண்ருட்டி பகுதியை சேர்ந்த டிரைவர் சாமுவேல் (வயது 26) என்பவரை பிடித்து போலீசார் விசாரித்தனர். விசாரணையில் சாமுவேலும் ஷீபாவும் கடந்த ஒரு ஆண்டாக காதலித்து பழகி வந்ததாகவும் திருமணம் செய்து கொள்ளும்படி சாமுவேலிடம் ஷீபா கூறிவந்தார்.

இதனால் இவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இந்த நிலையில் கடந்த 23-ந் தேதி வீட்டில் இருந்து வெளியே சென்ற ஷீபா காதலன் சாமுவேலுடன் காரில் பல்வேறு இடங்களுக்கு சென்றார். வெளியே சென்று விட்டு வீடு திரும்பியபோது சுங்குவார்சத்திரத்தை அடுத்த கோவலவேடு ஏரி பகுதிக்கு ஷீபாவை அழைத்துசென்று அங்கு வைத்து ஷீபாவின் கழுத்தை டிஷர்ட் மூலம் நெரித்து கொலை செய்ததும் உடலை ஏரியின் மதகுப்பகுதியில் வீசிவிட்டு சென்றதும் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

இந்த கொலை சம்பவம் குறித்து தொடர்ந்து காதலன் சாமுவேலிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News