நெல்லையில் சட்டமன்ற மனுக்கள் குழு அதிரடி ஆய்வு-வண்ணார்பேட்டையில் பாதாள சாக்கடை கேட்டு மக்கள் மனு
- பொதுமக்கள் பாதாள சாக்கடை திட்டத்தை தங்கள் பகுதியில் ஏற்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
- மதவக்குறிச்சியில் நடைபெற்று வரும் அரசு கல்லூரி கட்டுமான பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்கின்றனர்.
நெல்லை:
நெல்லை மாவட்டத்திற்கு தமிழ்நாடு சட்டமன்ற பேரவை மனுக்கள் குழு தலைவரும், அரசு தலைமை கொறடாவுமான கோவி செழியன் தலைமையில், உறுப்பினர்கள் உறுப்பினர்கள் கந்தசாமி, நல்லதம்பி, பொன்னுசாமி, ராதாகிருஷ்ணன் ஆகியோர் இன்று வந்தனர்.
நான்குவழிச்சாலை பணிகள்
இக்குழுவினர் இன்று காலை நெல்லை சுற்றுலா மாளிகை வந்தடைந்தனர். தொடர்ந்து காலையில் சட்டமன்ற பேரவை செயலாளர் சீனிவாசன் மற்றும் மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் முன்னிலையில், வண்ணார்பேட்டை வடக்கு புறவழிச்சாலையில் அமைந்துள்ள இளங்கோ நகர் மற்றும் தெற்கு புறவழிச்சாலையில் நடை பெறும் நான்குவழிச்சாலை விரிவாக்க பணிகளை குழுவினர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது இளங்கோ நகரில் வசிக்கும் பொதுமக்கள் பாதாள சாக்கடை திட்டத்தை தங்கள் பகுதியில் ஏற்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். அதன்பின்னர் நெல்லை அரசு பல்நோக்கு மருத்துவ மனையில் குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். தொடர்ந்து மானூர், கங்கைகொண்டான் ஆகிய இடங்களில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஆய்வு மேற்கொண்டனர்.
கட்டுமான பணி
பின்னர் மானூர் அருகே மதவக்குறிச்சியில் நடைபெற்று வரும் அரசு கல்லூரி கட்டுமான பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்கின்றனர். அதன்பின்னர் இன்று மதியம் நெல்லை கலெக்டர் அலுவலக கூட்டரங்களில் ஆய்வு கூட்டத்தில் பங்கேற்கின்றனர்.
அங்கு ஏற்கனவே மனுக்கள் குழுவால் பெறப்பட்ட மனுக்கள் மீதும், பேரவைக்கு அளிக்கப்பட்ட மனுக்கள் குழுவின் அறிக்கையில் குழு பரிந்துரை செய்துள்ள மனுக்களின் மீதும் துறை எடுத்த நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொள்ள உள்ளனர்.