ஊட்டி அய்யப்பன் கோவிலில் நாளை கும்பாபிஷேகம்
- ஊட்டியில் பிரசித்தி பெற்ற அய்யப்பன் கோவில் உள்ளது.
- நாளை காலை 11.20 மணிக்கு கும்பாபிஷேகம் நடக்கிறது.
ஊட்டி:
ஊட்டி அரசு ஆஸ்பத்திரி செல்லும் வழியில் பிரசித்தி பெற்ற அய்யப்பன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கும்பாபிஷேக விழா நாளை (சனிக்கிழமை) நடக்கிறது. இதையொட்டி நேற்று காலை 6 மணி அளவில் கணபதி ஹோமத்துடன் விழா தொடங்கியது.
இதைத்தொடர்ந்து மாலை 6.30 மணிக்கு சந்தியா தீபாராதனை, பிரசாத சுத்தி, அஸ்திர கலச பூஜை, அத்தாள பூஜை உள்பட பல்வேறு பூஜைகள் நடந்தன. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
இதேபோல் இன்று காலையில் பிரம்ம கலச பூஜை, பரிவார கலச பூஜை, மாலையில் சந்தியா தீபாராதனை, அதிவாச ஹோமம், பகவதி சேவை நிகழ்ச்சி நடந்தது.
நாளை (சனிக்கிழமை) காலை 9 மணி முதல் 10.30 மணி வரை 300 கலச பூஜை, கலச அபிஷேகம் நடக்கிறது. சிகர நிகழ்ச்சியான கும்பாபிஷேகம் காலை 11.20 மணி முதல் 12 மணிக்குள் நடக்கிறது.
இதில் கேரள மாநிலம் தீயன்னூர் கோவில் தந்திரி முரளிதரன நம்பூதிரி, ஊட்டி அய்யப்பன் கோவில் மேல்சாநதி கோவிந்தன் நம்பூதிரி ஆகியோர் கலந்து கொண்டு கும்பாபிஷேகத்தை நடத்தி வைக்கின்றனர்.
மாலை 6 மணிக்கு கொடியேற்றமும், நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) கொடியேற்றம், அத்தாள பூஜையும் நடக்கின்றன. நாளை (சனிக்கிழமை) முதல் வருகிற 16-ந் தேதி வரை தினமும் உற்சவ நிகழ்ச்சியும் நடக்கிறது.