குலசேகரன்பட்டினம் திருவிழா- கிராமங்கள் தோறும் குடில் அமைத்து தினசரி சிறப்பு வழிபாடு
- கிராமங்கள் தோறும் கடலில் புனித நீர் எடுத்து கொண்டு வந்து அதை தசரா குடிலில் வைப்பார்கள்.
- தசரா குழுக்கள் வசூல் செய்த காணிக்கைகளை கோவில் உண்டியலில் கொண்டு சேர்ப்பார்கள்.
உடன்குடி:
குலசேகரன்பட்டினம் தசரா திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி கிராமங்கள் தோறும் தசரா குடில் என்ற தசரா பிறை அமைத்து, கடலில் புனித நீர் எடுத்து கொண்டு வந்து அதை தசரா குடிலில் வைப்பார்கள். ஊர் பெயரில் தசரா குழு அமைத்து வேடமணியும் பக்தர்கள் தங்களது ஊர்குடிசையில் தினசரி இரவு ஒன்றாக கூடி அன்னை முத்தாரம்மனை பற்றி பாடல்கள் பாடி சிறப்புவழிபாடு நடத்துவார்கள். இரவு வீட்டுக்குச் செல்லாமல் தசரா குடிசையில் தங்கி விடுவார்கள்.
7-ம் திருநாள் அல்லது 8-ம் திருநாள் அன்று விதவிதமான வேடங்கள் அணிந்து, நையாண்டி மேளம், கரகம், குறவன் குறத்தி காவடி, தாரை, தப்பட்டை உட்பட பல்வேறு கலைஞர்களுடன் இணைந்து ஊர் ஊராக சென்று கலை நிகழ்ச்சிகள் நடத்திஅம்மன் பெயரில் காணிக்கை வசூல் செய்வார்கள். 10-ம் திருநாளான அக்டோபர் 5-ந் தேதி இரவு தசரா குழுக்கள் வசூல் செய்த காணிக்கைகளை கோவில் உண்டியலில் கொண்டு சேர்ப்பார்கள். அதனால் ஏராளமான கிராமங்களில் தசரா குடில் அமைத்து சிறப்பு வழிபாடு நடைபெற்று வருகிறது.