இளம்பெண்களை கடத்தியதாக 2 வாலிபர்கள் மீது புகார்
- இளம்பெண் கடந்த 14-ந்தேதி முதல் மாயமாகி விட்டார்.
- முரளி (23) என்ற வாலிபர்தான் தங்களது மகளை கடத்தி விட்டதாக தெரிவித்துள்ளனர்.
கிருஷ்ணகிரி,
திருப்பூர் மாவட்டம் திலக் நகர் பகுதியை சேர்ந்தவர் தனது மனைவி மற்றும் 16 வயது மகளுடன் ஓசூர் பகுதியில் தங்கி மில் ஒன்றில் வேலை பார்த்து வருகிறார்.
இந்நிலையில் அந்த இளம்பெண் கடந்த 14-ந்தேதி முதல் மாயமாகி விட்டார். பல்வேறு இடங்களில் விசாரித்தும் அவர் பற்றி எவ்வித தகவலும் கிடைக்கவில்லை. இதுகுறித்து ஓசூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் கொடுத்துள்ள இளம்பெண்ணின் தந்தை ஓசூர் அருகேயுள்ள பாகலூரை சேர்ந்த நந்து (வயது 20) என்ற வாலிபர் தனது மகளை கடத்தி சென்று விட்டதாக தெரிவித்துள்ளார்.
இந்த புகாரின்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதேபோல ஓசூரை அடுத்த அக்காரப்பள்ளி பகுதியை சேர்ந்த 17 வயது இளம்பெண் கடந்த 15-ந்தேதி முதல் காணாமல் போய்விட்டார்.இது குறித்து ஓசூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் கொடுத்துள்ள பெண்ணின் பெற்றோர் தேன்கனிக்கோட்டையை சேர்ந்த முரளி (23) என்ற வாலிபர்தான் தங்களது மகளை கடத்தி விட்டதாக தெரிவித்துள்ளனர்.
இந்த புகாரின் பேரிலும் போலீசார் வழக்கு பதிந்து மாயமான இளம் பெண்ணையும் கடத்திச்சென்றதாக கூறப்படும் வாலிபரையும் தேடி வருகின்றனர்.