விதிகளை மீறும் வாகனங்களால் போக்குவரத்து நெரிசல்
- விதிகளை மீறும் வாகனங்களால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது
- கரூர் நகரப்பகுதிகளில்
கரூர்:
கரூரில் போக்குவரத்து போலீசார் உத்தரவை மதிக்காமல் மினி பஸ்கள் இயக்கப்படுவதால் தீபாவளி பண்டிகை வர இருக்கும் இந்த நேரத்தில் கரூர் மாநகரத்தில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகின்றன. கரூர் மினி பஸ் ஸ்டாண்டில் இருந்து தினந்தோறும் 30 - க்கும் மேற்பட்ட மினி பஸ்கள் பல்வேறு பகுதிகளுக்கு இயக்கப்படுகின்றன. ஏற்கனவே கரூர் மினி பஸ் நிலையம் போதிய இடவசதி இல்லாமல் தினந்தோறும் போக்குவரத்து நெருக்கடிக்கு ஆளாகிறது. இதற்கிடையே பேருந்துநிலையம் அருகே உள்ள மனோகரா கார்னர், உழவர் சந்தை,லைட்ஹவுஸ் கார்னர் போன்ற பகுதிகளில் தினந்தோறும் போக்குவரத்து நெரிசல் காணப்படுகிறது.
இந்த நிலையில் கரூர் பஸ் நிலையத்தில் இருந்து செல்லும் ஒரு சில மினி பஸ் டிரைவர்கள் நினைத்த இடத்தில் நிறுத்தி பயணிகளை ஏற்றிக்கொண்டு செல்கின்றனர். இதனால் பின்னால் வரும் வாகனங்கள் வரிசையாக நிற்பதால் கூடுதலாக நெரிசல் ஏற்பட்டு வாகன போக்குவரத்தும் கடுமையாக பாதிக்கப்படுகிறது. இந்த நிலையில் மினி பஸ்களை நிறுத்தமில்லாத இடங்களில் நிறுத்தக்கூடாது என போக்குவரத்து போலீசார் பலமுறை எச்சரித்தும் மினி பஸ் டிரைவர்கள் அதனை கண்டு கொள்ளாமல் செயல்படுகின்றனர். எனவே போக்குவரத்து போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.