ரேஷன் அரிசி கடத்திய 3 பேர் கைது
- கரூரில் ரேஷன் அரிசி கடத்திய 3 பேர் கைது செய்யப்பட்டனர்
- 1,400 கிலோ அரிசி, சரக்கு வேனோடு பறிமுதல்
கரூர்,
கரூர் வேலாயுதம்பாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரெங்கராஜ், கரூர் மாவட்ட குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கணேசன் தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் நொய்யல் குறுக்குச்சாலை பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த சரக்கு வேனை நிறுத்தி போலீசார் சோதனை செய்ததில், ரேஷன் அரிசி கடத்தி வந்தது தெரியவந்தது. பின்னர் ரேஷன் அரிசி முட்டைகளை கடத்தி வந்ததாக நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர் தாலுகா குப்புச்சிபாளையம் பகுதியை சேர்ந்த சக்திவேல் (வயது 49), நன்செய் இடையாறு தெற்கு தெருவை சேர்ந்த பிரதீப் (27), பாலப்பட்டி நடுத்தெருவை சேர்ந்த விஜய்(31) ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். பின்னர் சரக்கு வேனில் கடத்தி வரப்பட்ட 28 மூட்டைகளில் இருந்த 1,400 கிலோ ரேஷன் அரிசியுடன், அந்த சரக்கு வேனை போலீசார் பறிமுதல் செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.