கரிவலம்வந்தநல்லூர் பால்வண்ணநாத சுவாமி கோவில் தேரோட்டம்
- திருவிழா 3-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
- 11-ம் திருநாளான நேற்று மாலை தேரோட்டம் நடைபெற்றது.
சங்கரன்கோவில்:
தென்காசி மாவட்டம் கரிவலம்வந்தநல்லூரில் ஒப்பனையம்மாள் சமேத பால்வண்ணநாத சுவாமி கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் சங்கரன்கோவில் சங்கரநாராயண சாமி கோவிலின் துணைக்கோவில் ஆகும்.
மிகவும் பழமை வாய்ந்த இக்கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் பங்குனி மாதம் பங்குனி பிரம்மோற்சவ திருவிழா நடைபெறுவது வழக்கம். தொடர்ந்து 13 நாட்கள் நடைபெறும்.
விழாவில் சுவாமி, அம்பாள், பஞ்ச மூர்த்திகள் காலை, இரவு ஆகிய இரண்டு வேளைகளும் வீதி உலா வருவது வழக்கம். இந்த ஆண்டுக்கான திருவிழா சுவாமி சன்னதி முன்பு அமைந்துள்ள கொடிமரத்தில் கடந்த 3-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் 11-ம் திருநாளான நேற்று மாலை நடைபெற்றது. காலை 10 மணிக்கு மேல் ஒப்பனையம்மாள் சமேத பால்வண்ணநாதர் தேரில் எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெற்றது. இரவு 7 மணிக்கு தேர் நிலையத்தில் இருந்து தொடங்கி ரதவீதிகள் வழியாக மீண்டும் இரவு 7.45 மணிக்கு நிலையத்தை வந்தடைந்தது.
இதில் கரிவலம் வந்தநல்லூர் மற்றும் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
நிகழ்ச்சியில் கோவில் துணை ஆணையர் ரத்தினவேல் பாண்டியன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் மற்றும் மண்டகப்படிதாரர்கள் செய்திருந்தனர்.