உள்ளூர் செய்திகள்

குளச்சலில் விசைப்படகுகளில் சிக்கிய வாளை மீன்கள்

Published On 2023-04-03 12:27 IST   |   Update On 2023-04-03 12:27:00 IST
  • 20 விசைப்படகுகள் இன்று காலை கரை திரும்பின.
  • கேரை மீன்கள் தலா ஒரு மீன்கள் 40 கிலோ முதல் 90 கிலோ வரை எடையிருந்தது

கன்னியாகுமரி :

குளச்சல் கடல் பகுதியில் சுமார் 300-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளும், 1000-க்கும் மேற்பட்ட பைபர் வள்ளங்கள், கட்டுமரங்களும் மீன் பிடித்தொழில் செய்து வருகின்றன.

விசைப்படகுகள் ஆழ்கடல் பகுதிவரை சென்று 10 நாட்கள் வரை தங்கி மீன் பிடித்துவிட்டு கரை திரும்பும்.ஆழ்கடல் பகுதியில் தான் சுறா, கேரை, இறால், புல்லன், கணவாய், கிளி மீன்கள், ராட்சத திரட்சி எனப்படும் திருக்கை போன்ற உயர் ரக மீன்கள் கிடைக்கும்.

பைபர் வள்ளங்கள் காலையில் சென்றுவிட்டு அருகில் மீன்பிடித்து மதியம் கரை திரும்பி விடும்.தற்போது விசைப்படகுகளில் கணவாய், புல்லன், கேரை போன்ற மீன்கள் கிடைக்கும் சீசனாகும். கடந்த வாரம் ஆழ்கடல் பகுதிக்கு மீன்பிடிக்க சென்ற படகுகளில் 20 விசைப்படகுகள் இன்று காலை கரை திரும்பின.

இவற்றுள் சூரை, புல்லன், வாளை, ஆயில் சுறா, கேரை ஆகிய மீன்கள் கிடைத்தன. மீனவர்கள் இம்மீன்களை துறைமுக ஏலக்கூடத்தில் கரையேற்றி விற்பனை செய்தனர்.ஒரு கிலோ புல்லன் தலா கிலோ ரூ.45 முதல் ரூ.50 வரை விலை போனது.

கேரை மீன்கள் தலா ஒரு மீன்கள் 40 கிலோ முதல் 90 கிலோ வரை எடையிருந்தது. இது கிலோ தலா ரூ.230 வரை விலைபோனது. இது கடந்த வாரத்தை விடவும் ரூ.20 விலை குறைவு. வாளை மீன்கள் தலா கிலோ ரூ.100 வரை விலைபோனது.

வாளை மீன்களுக்கு வெளியூர் மீன் சந்தையில் நல்ல மவுசு உள்ளதால் வியாபாரிகள் போட்டிப்போட்டு ஏலம் கேட்டு வாங்கி சென்றனர். இந்த மீன்களை கருவாடு மற்றும் மீன் எண்ணைக்காவும் வியாபாரிகள் வாங்கி செல்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News