கொட்டாரம் அருகே கடப்பாரையால் தாக்கி தொழிலாளியை கொலை செய்த வழக்கில் தந்தை-மகன் கைது
- பட்டப்படிப்பு முடித்த இவர் சரியான வேலை கிடைக்காததால் மரம் வெட்டும் தொழிலுக்கு சென்று வந்தார்
- 3 பேரும் கடப்பாரை, மண்வெட்டி கட்டை ஆகியவற்றை பயன்படுத்தி தாக்கி உள்ளனர்
கன்னியாகுமரி :
கன்னியாகுமரி அருகே உள்ள கொட்டாரம் அச்சன் குளம் ஓடைத் தெருவைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் மகன் சுரேஷ் ராஜா (வயது 22) .
பட்டப்படிப்பு முடித்த இவர் சரியான வேலை கிடைக்காததால் மரம் வெட்டும் தொழிலுக்கு சென்று வந்தார். அப்போது சுரேஷ் ராஜாவுக்கு குடிப்ப ழக்கம் ஏற்பட்டது. மது குடித்து விட்டு சிலருடன் தகராறிலும் ஈடுபட்டு வந்து உள்ளார்.
பக்கத்து வீட்டைச் சேர்ந்த செந்தில் குமார் மகன் சாம்சன் மனோ (18) என்பவருடனும் சுரேஷ் ராஜாவுக்கு மோதல் இருந்து வந்தது. இந்த முன்விரோதத்தில் மது போதையில் இருந்த சுரேஷ்ராஜாவை, சாம்சன்மனோமற்றும் சிலர் கடப்பாரை, கட்டையால் தாக்கி உள்ளனர். இதில் சுரேஷ்ராஜா பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து கன்னியா குமரி போலீஸ் துணை சூப்பிரண்டு ராஜா, இன்ஸ்பெக்டர்கள் சாந்தி (கன்னியாகுமரி), சாய் லட்சுமி (சுசீந்திரம்) மற்றும் போலீசார் விசாரணை நடத்தினர். தொடர்ந்து சாம்சன்மனோவை கைது செய்தனர்.
அவரிடம் நடத்திய விசாரணையில் அதே பகுதியைச் சேர்ந்த செல்வராஜ் (54), அவரது மகன் ஆதிஞான ஜெபின் (19) ஆகியோருக்கும் கொலை யில் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட ஆதிஞான ஜெபின், தனியார் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வருகிறார். இவரும் சாம்சன் மனோவும் நண்பர்கள். ஆதிஞான ஜெபினிடம், சுரேஷ்ராஜா பற்றி சாம்சன் கூறி உள்ளார். நேற்று முன்தினம் அவர் மது போதையில் தகராறு செய்ததோடு அரிவா ளுடன் வந்து மிரட்டியதாகவும் சாம்சன் கூறி உள்ளார். இதனைக் தட்டிக் கேட்கத் தான்,செல்வராஜூம் ஆதிஞான ஜெபினும் வந்துள்ளனர்.
ஆனால் சுரேஷ்ராஜா, மது போதையில் கால்வாயில் கிடந்துள்ளார். இதனை தங்களுக்கு சாதகமாக சாம்சன் மனோ உள்பட 3 பேரும் கடப்பாரை, மண்வெட்டி கட்டை ஆகியவற்றை பயன்படுத்தி தாக்கி உள்ளனர். இதில் தான் சுரேஷ்ராஜா இறந்து உள்ளார்.
மேற்கண்ட தகவல்கள் போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது. தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.