உள்ளூர் செய்திகள்

சேவை குறைபாடு காரணமாக டாக்டர் தம்பதியினருக்கு ரூ.1 லட்சம் வழங்க வேண்டும்

Published On 2023-05-10 06:51 GMT   |   Update On 2023-05-10 09:01 GMT
  • குமரி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவு
  • ஒரு மாத காலத்திற்குள் வழங்க வேண்டும் என உத்தர விட்டனர்.

நாகர்கோவில் :

கன்னியாகுமரி மாவட்டம் காப்புக்காடு பகுதியை சேர்ந்த டாக்டர் தம்பதியினர் நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் கடன் பெற்றுள்ளனர்.

இதற்காக தங்களது சொத்து பத்திரத்தை அடமானமாக பதிவு செய்து கொடுத்துள்ளனர். இந்த கடன் முழுவதையும் செலுத்தி விட்டு பின்பு வேறு ஒரு தனியார் நிறுவனத்திடம் கடன் பெற்றுள்ளனர். ஆனால் முதலில் கடன் கொடுத்த தனியார் நிதி நிறுவனம் அடமானமாக கொடுத்த அசல் பத்திரத்தை திருப்பி கொடுக்கவில்லை.

இதனால் மன உளைச்சலுக்கு ஆளான நுகர்வோர்கள் வழக்கறிஞர் மூலம் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். ஆனால் இதன் பின்னரும் உரிய பதில் கிடைக்காததால் கன்னியாகுமரி மாவட்ட நுகர்வோர் குறை தீர் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

வழக்கை விசாரித்த கன்னியாகுமரி மாவட்ட நுகர்வோர் குறை தீர் ஆணைய தலைவர் சுரேஷ், உறுப்பினர் சங்கர் ஆகியோர் தனியார் நிதி நிறுவனத்தின் சேவை குறைப்பாட்டினை சுட்டிக் காட்டி பாதிக்கப்பட்ட நுகர்வோருக்கு நஷ்ட ஈடு ரூ.1 லட்சம் வழக்கு செலவு தொகை ரூபாய் 7,500 மற்றும் திருப்பி கொடுக்காத அசல் பத்திரத்தின் நகல் பத்திரத்தை உரிய வழி முறைகளை பின்பற்றி ஒரு மாத காலத்திற்குள் வழங்க வேண்டும் என உத்தர விட்டனர்.

Tags:    

Similar News