உள்ளூர் செய்திகள்

நாகர்கோவில் கிணற்றில் எலும்பு கூடு

Published On 2022-09-03 09:30 GMT   |   Update On 2022-09-03 09:30 GMT
  • மாயமானவர்கள் பட்டியலை தயாரித்து போலீஸ் விசாரணை
  • எலும்புக்கூடு ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டது.

நாகர்கோவில்:

நாகர்கோவில் டி.வி.டி. காலனி செந்தூரான் நகர் 3-வது தெருவை சேர்ந்தவர் தங்கவேல்.

இவர் தற்போது பெங்களூரில் குடும்பத்து டன் வசித்து வருகிறார். இவருக்கு சொந்தமான இடத்தில் கிணறு ஒன்று உள்ளது. இந்த கிணறு தற்போது பாழடைந்து காணப்படுகிறது. இந்த கிணற்றில் எலும்புக்கூடு ஒன்று கிடந்ததை பார்த்த பொதுமக்கள் கோட்டார் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.

நாகர்கோவில் தீயணைப்பு வீரர்களும் போலீசாரும் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டனர். பின்னர் தீயணைப்பு வீரர்கள் கயிறு கட்டி கிணற்றுக்குள் இறங்கி கிணற்றில் கிடந்த எலும்புக்கூட்டை ஒரு சாக்கில் கட்டி மேலே கொண்டு வந்தனர்.

பின்னர் எலும்புக்கூடு ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டது. டி.எஸ்.பி. நவீன்குமார் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் அந்தப் பகுதியில் மர்மநபர் ஒருவர் கிணற்றின் மீது இருந்து மது அருந்தியதாகவும், அவரை கடந்த சில நாட்களாகவே காணவில்லை என்றும் தெரிவித்தனர்.

எனவே மது குடித்துக் கொண்டிருந்த மர்மநபர் தான் கிணற்றில் தவறி விழுந்து இறந்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்.மேலும் அவரை யாராவது கிணற்றில் தள்ளி கொலை செய்தார்களா? என்ற கோணத்திலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

மேலும் நாகர்கோவில் மாநகரப் பகுதியில் மாயமானவர்கள் குறித்த விவரங்களை போலீசார் சேகரித்து வருகிறார்கள். அவர்களது பட்டியலை தயாரித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Tags:    

Similar News