மோட்டார் சைக்கிளில் சென்று பெண்களிடம் நகை பறித்த கொள்ளையன் கைது
- கடந்த அக்டோபர் மாதம் பெண் கொடுத்த புகாரின் பேரில் மார்த்தாண்டம் போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை
- சி.சி.டி.வி. காமிரா பதிவு காட்சிகளை சேகரித்து ஆய்வு செய்ததில் அடையாளம் தெரிந்தது
கன்னியாகுமரி:
மார்த்தாண்டம் போலீஸ் நிலையத்திற்குட்பட்ட மருதன்கோடு பகுதியில் கடந்த அக்டோபர் மாதம் சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் 4 பவுன் தாலி செயினை பறித்துச் சென்றனர்.
இது குறித்து பெண் கொடுத்த புகாரின் பேரில் மார்த்தாண்டம் போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர். மேலும் அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. காமிரா பதிவு காட்சிகளை சேகரித்து ஆய்வு செய்தனர்.
தனிப் பிரிவு போலீஸ் சப் - இன்ஸ்பெக்டர் அருளப்பன் தலைமையிலான போலீசார் நடத்திய இந்த விசாரணையில் நகை பறிப்பில் ஈடுபட்டவன் அடையாளம் தெரியவந்தது. அவனை கைது செய்ய போலீசார் நடவடிக்கை எடுத்தனர்.
அடையாளம் காணப்ப ட்டவன் கேரள மாநிலம் பாற சாலை பகுதியைச் சேர்ந்த ஜினில் (வயது 28) என்பது உறுதியானதால் சப்- இன்ஸ்பெக்டர் அருளப்பன் தலைமையிலான தனிப் படை போலீசார் கேரளா விரைந்தனர். அவர்கள் பாறசாலையில் பதுங்கி இருந்த ஜினிலை கைது செய்தனர்.தொடர்ந்து அவனிடம் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
ஜினில், இருசக்கர வாகனத்தில் சென்று பல பெண்களிடம் நகை பறித்து இருப்பதும் அவன் மீது கேரளா மற்றும் குமரி மாவட்டத்தில் உள்ள போலீஸ் நிலையங்களில் வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரிய வந்தது. மேலும் குற்றச் செயலில் ஜினிலுடன் ஈடுபட்டு வந்த அவரது நண்பரையும் போலீசார் தேடி வருகின்றனர்.