சேத்தியாதோப்பு அருகே மூதாட்டியிடம் நூதன முறையில் நகை பறிப்பு
- சேத்தியாதோப்பு அருகே மூதாட்டியிடம் நூதன முறையில் நகை பறிக்கப்பட்டது.
- போலீசார் ரோந்து பணியில் இருந்தபோது சந்தேகத்திற்கு இடமாக மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபரை பிடித்து விசாரணை செய்தனர்.
கடலூர்:
சேத்தியாதோப்பு அருகே தட்டான் ஓடைபகுதியை சேர்ந்தவர் ஆபரணம் (வயது 70). இவர் வீட்டில் தனியாக வசித்து வருகிறார். இந்நிலையில் மூதாட்டியுடன் யாரும் இல்லாததை அறிந்த மர்ம நபர் ஒருவர் சில நாட்களுக்கு முன்பு அங்கு சென்றார். அப்போது அந்த நபர் மூதாட்டியால் முதியோர் உதவி தொகை உங்களுக்கு தருவதாக கூறி நூதன முறையில் அவரிடம் இருந்து 4கிராம் காதணித்தோடு திருடி சென்றார். இது குறித்து மூதாட்டி சேத்தியாதோப்பு போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் சேத்தியாதோப்பு போலீசார் வழக்கு பதிவு செய்து நூதன முறையில் மூதாட்டியிடம் திருடி சென்ற மர்ம நபரை வலைவீசி தேடி வந்தனர். இந்நிலையில் சேத்தியா தோப்பு அருகே குறுக்கு ரோடு பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர் அப்போது சந்தேகத்திற்கு இடமாக மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபரை பிடித்து விசாரணை செய்தனர். அப்போது அவர் முன்னுக்கு பின் முரணான தகவல் தெரிவித்ததால் அவரை போலீஸ் நிலையம் அழைத்து சென்று கிடுக்கி பிடி விசாரணை செய்தனர். விசாரணையில் முடிகண்டநல்லூர் பகுதியை சேர்ந்த சரத்குமார் என்பதும் அந்த மூதாட்டி இடம் நூதன முறையில் திருடியதையும் ஒப்புக்கொண்டார். உடனே போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.