உள்ளூர் செய்திகள்

பாளையில் போக்குவரத்து ஊழியர் வீட்டில் நகை-பணம் திருட்டு - மற்றொரு வீட்டில் கொள்ளை முயற்சி

Published On 2022-10-26 09:17 GMT   |   Update On 2022-10-26 09:17 GMT
  • தீபாவளி பண்டிகையையொட்டி வீட்டை பூட்டிவிட்டு தனது குடும்பத்தினருடன் ராம் ஜவகர் வெளியூர் சென்றுவிட்டார்
  • 3 பவுன் தங்க நகை மற்றும் ரூ.10 ஆயிரம் பணம் உள்ளிட்டவை திருட்டு

நெல்லை:

பாளை கே.டி.சி. நகர் அருகே உள்ள சீனிவாச நகரை சேர்ந்தவர் ராம் ஜவகர்(வயது 57). இவர் அரசு பஸ் கண்டக்டராக வேலை பார்த்து வருகிறார்.

நகை திருட்டு

தீபாவளி பண்டிகை யையொட்டி வீட்டை பூட்டிவிட்டு தனது குடும்பத்தினருடன் ராம் ஜவகர் வெளியூர் சென்றுவிட்டார். நேற்று மீண்டும் அவர்கள் வீடு திரும்பினர்.

அப்போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது.உடனே அவர்கள் உள்ளே சென்று பார்த்தனர். அப்போது பீரோவில் வைக்கப்பட்டு இருந்த 3 பவுன் தங்க நகை மற்றும் ரூ.10 ஆயிரம் பணம் உள்ளிட்டவை திருட்டு போயிருந்தது.

இதுதொடர்பாக ராம் ஜவகர் ஐகிரவுண்டு போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

பாளை மகிழ்ச்சிநகரை சேர்ந்தவர் ராஜ் (55). இவர் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தனது குடும்பத்தினருடன் வெளியூருக்கு சென்றுவிட்டார். இன்று காலை அவர் வீடு திரும்பினார். அப்போது அவரது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் உள்ளே சென்று பார்த்த போது பீரோ திறக்கப்பட்டு அதில் இருந்த பொருட்கள் சிதறிக் கிடந்தது.

வீட்டில் ஆட்கள் இல்லாததை நோட்டமிட்ட மர்மநபர்கள் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டதும், அங்கு நகை, பணம் இல்லாததால் கொள்ளை சம்பவம் தவிர்க்கப்பட்டதும் தெரியவந்தது. இது தொடர்பாக பெருமாள்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

Similar News